Search This Blog

Friday, September 7, 2018

அண்ணாமலைப் பல்கலை.யில் பட்ட சான்றிதழ் பெறாதோருக்கு சிறப்பு முகாம்

0 comments
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் படித்து தேர்ச்சி பெற்று, கடந்த 27 ஆண்டுகளாக (1991-2017) சான்றிதழ் பெறாத மாணவர்களுக்கு நிலுவைச் சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம் வரும் 28 -ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை அண்ணாமலை நகரில் நடைபெற உள்ளது.



இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.முருகேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம், கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 2017 -ஆம் ஆண்டு வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள மதிப்பெண் பட்டியல், பட்டச் சான்றிதழ் உள்ளிட்டவற்றைப் பெற்றுக்கொள்ள ஏதுவாக, நிலுவைச் சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம் தேர்வுத் துறை சார்பில் நடைபெற உள்ளது. 

வருகிற 28 -ஆம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. இதில், மாணவர்கள் தங்களது சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

சான்றிதழைப் பெற வரும் மாணவர்கள் தங்களின் ஏதேனும் ஓர் புகைப்பட அடையாள அட்டையுடன் நேரில் வந்து பல்கலைக்கழகத்தில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தி, அனைத்து வகையான சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளலாம்.



மேலும், இதுதொடர்பான கூடுதல் தகவலுக்கு பல்கலைக்கழகத் தேர்வுத் துறை, தொலைதூரக் கல்வி இயக்ககம் அல்லது பல்கலைக்கழக கல்வி மையங்களைத் தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.