JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, September 22, 2018

ராக்கெட் மூலம் மனிதர்கள் வெளியூர்களுக்கு செல்லும் நாள் விரைவில் உருவாகும் - மயில்சாமி அண்ணாதுரை


ராக்கெட் மூலம் மனிதர்கள் வெளியூர்களுக்கு செல்லும் நாள் விரைவில் உருவாகும் - மயில்சாமி அண்ணாதுரை தகவல்



தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். 

நிகழ்வுக்கு வந்தவர்களை மாணவி கீர்த்தியா வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

முன்னாள் இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை மாணவர்களிடம் பேசும்போது , ராக்கெட் மூலம் விரைவில் நாம் வெளியூர் பயணம் செய்யும் நாள் உருவாகும்.அப்போது இங்கு இருந்து பல வெளிநாடுகளுக்கு பலமணி நேரம் பயணம் செய்யும் நேரம் குறைந்து அடுத்த நாட்டுக்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம்.நானும் 40 ஆண்டுகளுக்கு முன்பு உங்களில் ஒருவனாக உங்களைப்போல் இதே சூழ்நிலையில்தான் அரசு பள்ளியில் படித்தேன்.



உங்களில் என்னை நான் இன்று பார்க்கிறேன்.என்னுடனான உங்கள் கலந்துரையாடல் உங்களை வளர்த்துக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.நான் இரண்டாம் வகுப்பு படித்தபோது இரண்டு ரூபாய் பென்சில் பரிசாக வாங்கியதும்,என்னை என் அப்பா கேட்ட கேள்வி அடுத்தது என்ன?என்பதுதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது.

பென்சிலில் ஆரம்பித்து பத்மஸ்ரீ பட்டம் பெற்றதற்கு பிறரிடம் நான் கேட்ட கேள்விகளும்,பிறர் என்னிடம் கேட்ட கேள்விகளுமே எனது வளர்ச்சிக்கு காரணம்.கேள்விகளை கேட்கும்போது அதற்குரிய பதிலாக நீ இருக்க வேண்டும் என்று அப்துல்கலாம் அய்யா எனக்கு சொன்னதை செயல்படுத்தியதால்தான் செயற்கை கோள்களை என்னால் உருவாக்க முடிந்தது . 

நீங்களும் கேள்விகளை கேட்பதுடன் அதன் பதில்களை அறிந்து உங்கள் வாழ்க்கையில் அதனை பயன்படுத்திகொள்ளுங்கள்.இவ்வாறு பேசினார்.நிறைவாக மாணவர் அய்யப்பன் நன்றி கூறினார்.