Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 20, 2018

தமிழகம்பாஸ்போர்ட் பெற செல்போன் மூலம் விண்ணப்பிக்கலாம்; அலுவலர் தகவல்





கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சிவக்குமார் கூறியதாவது: கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 11.25 லட்சத்திற்கும் மேற்பட்ட பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டில் 73 ஆயிரம் பாஸ்போர்ட் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 1,73,147 பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு இதுவரை 1,35,326 பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளன. தட்கல் முறையில் விண்ணப்பம் செய்வோருக்கு 3 நாளில் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.



கோவை மண்டலத்தில் கடந்த ஆண்டு 11 கல்லூரிகளில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் நடைமுறை முற்றிலும் டிஜிட்டல் மற்றும் கணினிமயமாக்கப்பட்டுள்ள நிலையில், போலி பாஸ்போர்ட் பிரச்னை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.

கோவை அவினாசி சாலையில் கடந்த 2011ம் ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்துடன் இணைந்து பாஸ்ேபார்ட் சேவா மையம் துவக்கப்பட்டது. இம்மையம் முழுமையான டிஜிட்டல் வசதிகளுடன் இயங்கி வருவதால், பாஸ்போர்ட் விநியோக நடைமுறைப்பணிகள் மிகவும் சுலபமானது. முன்பு 45 நிமிடங்கள் நீடித்த பாஸ்போர்ட் விநியோக நடைமுறை தற்போது டிஜிட்டல் முறையால் 14 நிமிடங்களாக குறைந்துள்ளது. பாஸ்போர்ட் விநியோகத்திற்கான போலீசாரின் ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு துரிதப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாரின் சரிபார்த்தலுக்கான கேள்விகளும் 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் ஆவணங்களை போலீசார் சரிபார்த்தலுக்கான காலம் 30 நாளில் இருந்து சராசரியாக 9 நாட்களாக குறைந்துள்ளது.



ஈரோடு, கோவை, சேலம் புறநகர் மாவட்டங்களில் 7 நாட்களிலும், நீலகிரி மாவட்டத்தில் 6 நாட்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 5 நாட்களிலும் ேபாலீசாரின் ஆவணங்கள் சரிபார்ப்பு பணி முடிவடைந்து விடுகிறது. கோவை மாநகரில் மட்டும் 13 நாட்களாகிறது. இதற்கு அதிக அளவிலான பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் விவரங்களை சரிபார்க்க வேண்டியிருப்பது முக்கிய காரணமாக உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு சேலம் தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை தொடங்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. அங்கு இச்சேவை மூலம் தற்போது வரை 31,678 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த மே மாதம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை தொடங்கப்பட்டது. வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் குன்னூர், ஈரோட்டில் உள்ள தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகள் முன்பை விட தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்தப் பகுதியிலும் வசிப்போர், வேறெந்தப் பகுதியில் இருந்தும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் நடைமுறை ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, ஆண்ட்ராய்டு செல்போனுக்கான பிரத்யேக அப்ளிகேஷனும் (மொபைல் ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் மூலமும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சிவக்குமார் கூறினார்