முன்னாள் மாணவர்களால் முன்னேறும் அரசு பள்ளி!

ஆவடி: முன்னாள் மாணவர்களின் முயற்சியால், ஆவடி அருகே உள்ள அரசு பள்ளி, 13 கண்காணிப்பு கேமராக்கள், கணினி மையம் என, புதுப்பொலிவு பெற்று, முன்னேறி வருகிறது.




ஆவடி அருகே, திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகரில், 1966ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் காமராஜர், உயர்நிலைப்பள்ளியை துவக்கினர். 2012ம் ஆண்டு வரை, பள்ளி கட்டடம், பெருமளவில் சிதிலம் அடைந்திருந்தது.

இதனால், தங்கள் குழந்தைகளை, இப்பள்ளியில் சேர்க்க, பெற்றோர் தயக்கம் காட்டினர். இப்பள்ளியில் படித்த பலர், தற்போது நல்ல பணிகளில் உள்ளனர். பெரும்பாலானோர், காவல்துறையில் பணிபுரிவதாக, பள்ளி ஆசிரியர்கள் பெருமிதம் கொள்கின்றனர். ஆனால், பள்ளியின் நிலை, ஆண்டுதோறும் பின்நோக்கி பயணித்ததை அறிந்த, முன்னாள் மாணவர்கள், வேதனை அடைந்தனர். இதையடுத்து, 2011ல், அவர்கள் ஒன்றிணைந்து, முன்னாள் மாணவர்கள் பள்ளி வளர்ச்சி குழுவை உருவாக்கினர்.

பள்ளிக்கு தேவையான கட்டமைப்பு, வசதிகளில், அந்த குழு அக்கறை காட்டியது. தனியார் நிறுவனங்கள் வழியாக, பள்ளியின் தேவையை பூர்த்தி செய்யும் திட்டத்திலும் களமிறங்கியது.



இப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் விடா முயற்சியால், 2012ல், மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.கடந்த கல்வியாண்டு முதல், 10, 11ம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 பொதுத் தேர்வு மையமாக செயல்பட்டு வருகிறது.

பள்ளியைச் சுற்றி, மண்டிக்கிடந்த புதர்களை அகற்றி, ஒரு லட்சம் ரூபாய் செலவில், வளாகத்திற்கு, மூன்று கேட்டுகள் அமைக்கப்பட்டன. 4.18 லட்சம் ரூபாய் செலவில், பள்ளி கட்டடங்கள் மற்றும் 560 மீட்டர் அளவிற்கு சுற்றுச்சுவர் புனரமைக்கப்பட்டது.இந்த புணரமைப்பு பணிகளால், சிதிலமடைந்திருந்த பள்ளி, தற்போது வண்ணமயமாக காட்சிஅளிக்கிறது.

&'என்.டி.டி. டேட்டா&' என்ற தனியார் நிறுவனத்தின் உதவியால், 8.5 லட்சம் ரூபாய் செலவில், கணினி மையம் அமைக்கப்பட்டது. 4.14 லட்சம் ரூபாய் செலவில், மதிய உணவுக் கூடம் கட்டித்

தரப்பட்டுள்ளது.மேலும், மாணவ - மாணவியரின் பாதுகாப்புக்காக, 70 ஆயிரம் ரூபாய் செலவில், பள்ளி வளாகம் முழுவதும், 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக, பல்வேறு வசதிகளுடன், திருமுல்லைவாயல் மேல்நிலைப்பள்ளி பொலிவுப்பெற்று உள்ளது. முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனத்தின் உதவியுடன், கடந்த கல்வி ஆண்டில் மட்டும், 16.83 லட்சம் ரூபாய் செலவில், பள்ளிக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.



மேலும், அங்கன்வாடி மையம், நகராட்சி துவக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி அனைத்தும், ஒரே வளாகத்தில் செயல்படுகிறது. ஆனால், இங்குள்ள அங்கான்வாடியில், குழந்தையை சேர்த்தால், பிளஸ் 2 வரை, வேறு எந்த பள்ளிக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.தற்போது, நகராட்சி துவக்கப்பள்ளியில், 400 மாணவ - மாணவியரும்; அரசு மேல்நிலைப்பள்ளியில், 850 மாணவ - மாணவியரும் படித்து வருகின்றனர்.

பள்ளி, மாணவ - மாணவியரின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொணர, பல்வேறு சிறப்பு பயிற்சி முகாம்கள், இப்பள்ளியில் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. தற்போது, இப்பள்ளியில், தங்கள் குழந்தைகளைச் சேர்க்க, சுற்று வட்டாரத்தில் உள்ள பெற்றோர், ஆர்வம் காட்டி வருகின்றனர்.மாணவர் சேர்க்கை குறைவால், பல அரசு பள்ளிகள் மூடப்படும் நிலையில், முன்னாள் மாணவர்களின் முயற்சியால், திருமுல்லைவாயல் அரசு பள்ளி, கம்பீரமாக மீண்டும் அறிவொளி வீசிக்கொண்டிருக்கிறது.

&'டிஜிட்டல்&' பள்ளி!

இப்பள்ளியில் படித்த நாங்கள், சிறப்பான நிலையில் இருக்கிறோம். ஆனால், நாங்கள் படித்த பள்ளி சிதிலமடைந்திருந்தது. எங்கள் பள்ளியை, மீட்டெடுக்க, ஒன்று திரண்டோம். அனைத்து தரப்பில் இருந்தும், எங்களுக்கு உதவிகள் வந்தது.அடுத்த கட்டமாக, &'டிஜிட்டல்&' பள்ளியாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே, பள்ளியில், ஒரு, &'ஸ்மார்ட் கிளாஸ்&' உள்ளது. இதன் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக அரசு தரப்பிலும், முன்னாள் மாணவர்கள் தரப்பிலும் உதவி கோரி வருகிறோம்.



- பள்ளி முன்னாள் மாணவர்கள்
Share:

Categories