JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, September 27, 2018

அனைவருக்கும் அதிவேக இணையசேவை: புதிய தொலை தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

குடிமக்கள் அனைவருக்கும் அதிவேக இணையசேவை வழங்குவதை அடிப்படையாகக் கொண்ட புதிய தொலை தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.





தேசிய மின்னணு தொலைத்தொடர்பு கொள்கை - 2018 என்று பெயரிடப்பட்டுள்ள இக்கொள்கையினை, முதலில் இவ்வாண்டு மே மாதம் மத்திய அரசு வரைவாக வெளியிட்டது. பின்னர் தேசிய தொலைத்தொடர்பு ஆணையம் இவ்வாண்டு ஜூலையிவ் இதற்கு ஒப்புதல் அளித்தது.



அனைவருக்கும் பொதுவாக 50 எம்பிபிஎஸ் (மெகா பைட் பெர் செகண்ட்) வேகத்தில் இணைய சேவை வழங்குவதையும், ரூ. 1 லட்சம் கோடி அளவில் புதிய முதலீடுகளை வரவழைப்பதையும் இது அடிப்படையாகக் கொண்டுள்ளது.





மத்திய அமைச்சரவைக்கு கூட்டத்திற்குப் பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியதாவது:

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அதிவேக இணையசேவை வழங்குவதும், 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் இக்கொள்கையின் செயல் திட்டங்களிலொன்றாகும்.

எங்கும் எளிதில் கிடைக்குமாறும் பாதுகாப்பானதும் அனைவரும் பயன்படுத்தும் விலையிலும் அமைந்த மின்னணு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதும் இதன் நோக்கம்.

அதேபோல் 2020-ஆம் ஆண்டுவாக்கில் 1 ஜிபிபிஎஸ் (ஜிகா பைட் பெர் செகண்ட்) வேகத்திலும், 2020- ஆம் ஆண்டுவாக்கில் 10 ஜிபிபிஎஸ் (ஜிகா பைட் பெர் செகண்ட்) வேகத்திலும் இணைய சேவைகள் இதன் மூலம் வழங்கப்படும்.



அத்துடன் உலக நாடுகளிடையே தகவல் தொடர்பு மற்றும் தொலை தொடர்பு சேவை குறியீட்டு எண் வரிசையில், இந்தியாவை முதல் 50 இடங்களுக்குள் கொண்டு வ்ருவதையும் மனதில் கொண்டு இந்த் கொள்கை வடி வமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.