JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, October 10, 2018

ஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்





மதுரையில் ஆசிரியர் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்களை மறுஆய்வுக்கு உட்படுத்தும் கல்வித்துறை முடிவால் ஆசிரியர் பலர் கலக்கத்தில் உள்ளனர்.

முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் ஆசிரியர்களை கண்காணிக்க அடுத்தடுத்து திட்டங்களை அமல்படுத்துகிறார். வழக்கமான பள்ளி ஆய்வு தவிர 'ஆபரேஷன் - இ' திட்டம் மூலம் சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்கள் சிறப்பு குழு முன்னறிவிப்பின்றி காலை 8:00 மணிக்கு தினம் ஏதாவது ஒரு பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்துவது அமலில் உள்ளது. இதனால் ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளி செல்வது அதிகரிக்கிறது.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் காலாண்டு தேர்வு விடைத்தாள்களை மறு ஆய்வு செய்யும் (விடைத்தாள் கூர்ந்தாய்வு) திட்டத்தை நேற்று துவங்கியது.



இதன்படி 15 கல்வி ஒன்றியங்களில் 294 பள்ளிகளை சேர்ந்த அனைத்து பாடங்களிலும் 2900 விடைத்தாள் (ரேண்டமாக) மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

கல்வி அதிகாரி கூறியதாவது: ஒவ்வொரு கல்வி ஒன்றியத்திற்கும் ஒரு பாடத்தின் விடைத்தாள் அடிப்படையில் மறுஆய்வு செய்யப்பட்டது.
இதில் ஏற்படும் மதிப்பெண் மாற்றம் குறித்து இன்று (அக்.,10) தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியரிடம் விளக்கம் கேட்கப்படும். இதன் பின் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. இத்திட்டம் நடுநிலை, தொடக்க பள்ளிகளிலும் அடுத்து அமல்படுத்தப்படும், என்றார்.