JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, October 2, 2018

பணிபுரிபவர்களுக்கான எம்பிஏ படிப்பு: விண்ணப்பிக்க சென்னை ஐஐடி அழைப்பு

பணியில் இருப்பவர்களுக்கான எம்பிஏ படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்தி: சென்னை ஐஐடி-யின் மேலாண்மை கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் இந்த இரண்டு ஆண்டுகள் இ-எம்பிஏ (எக்ஸகியூடிவ் எம்பிஏ) என்ற பணியில் இருப்பவர்களுக்கான எம்.பி.ஏ. படிப்பு 2018-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.



வார இறுதி நாள்களில், அதுவும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே இந்தப் படிப்புகளுக்கான வகுப்புகள் நடத்தப்படும். பல்வேறு துறைகள் மற்றும் தொழில்நிறுவனங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஏற்ற வகையிலும், நவீன மாற்றங்களுக்கு ஏற்ற வகையிலும் இந்தப் படிப்புக்கான பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அனுபவமிக்க மற்றும் சிறந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களைக்கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 

இந்தப் படிப்பில் சேர விரும்புபவர்கள் இளநிலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதோடு, 3 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.



இந்தப் படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான நுழைவுத் தேர்வுக்கு ஞாயிற்றுக்கிழமை (செப்.30) முதல் விண்ணப்பம் தொடங்கியது . தொடர்ந்து 30 நாள்கள் வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் மாணவர்கள் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைப்புக் கடிதம் மூலம் அழைக்கப்படுவர். இந்தப் படிப்புக்கான வகுப்புகள் 2019 ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும்.

மேலும் விவரங்களை www.iitm.ac.in என்ற சென்னை ஐஐடி இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.