JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, November 4, 2018

அரசு பணிக்காக 17 ஆயிரம் பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி செயலாளர்

நடப்பாண்டில் தமிழக அரசுப் பணிக்கு 17 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்



சென்னையில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், நடப்பாண்டில் தேர்வு மூலம் அரசுப் பணிக்கு 17 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் பல துறைகளில் பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
அனைத்து அரசுத் தேர்வுகளுக்கும் தேர்வு தாள், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், குரூப் 2 தேர்வுகளில், தமிழில் தேர்வு தாள் தயாரிக்கும் வடிவமைப்பாளர்கள் இல்லாததால் ஒரு சில தேர்வுகளை ஆங்கிலத்தில் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

இணையதளம் மூலம் ஆவணங்கள் சரிபார்ப்பதை அறிமுகப்படுத்தியததால் இந்த ஆண்டு அதிகப்படியான விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டதாக கூறிய அவர்கள் வரும் 11-ஆம் தேதி தொடங்கும் குரூப் 2 தேர்வுகளை 6 லட்சத்து 26 ஆயிரத்து 503 பேர் தேர்வு எழுதவுள்ளனர் என தெரிவித்தனர்.

மேலும், குரூப்-1 தேர்விற்கு இனி மேல் 10 மாதங்களில் இறுதி முடிவு வெளியிடப்படும். அறிவிக்கை வெளியிட்ட 2 மாதத்தில் முதல்நிலை தேர்வு, அடுத்த 2 மாதத்தில் தேர்வுக்கான முடிவு வெளியாகும்.



அண்மையில் நீதிபதி பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட அனைத்தும் முடிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டோரின் விவர பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினர்.