Tuesday, November 20, 2018

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரிக்கை

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு பகுதி நேர சிறப்பாசிரியர் சங்க ஆலோசனைக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.



மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செந்தமிழ்செல்வன், பரமசிவம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மாநிலத் தலைவர் ரமேஷ் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் பணி நியமனம் செய்யப்பட்ட 16, 548 பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். பணியாற்றும் அனைவருக்கும் அரசு தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சியை அரசு வழங்க வேண்டும்.




கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு தொழில்நுட்பத் தேர்வை உடனடியாக நடத்த அறிவிப்பு வெளியிடுவதோடு, பயிற்சி முடிக்கும் நிலையில் பணியில் சேர்ந்து பள்ளிகளில் பணியாற்றிவரும் பகுதி நேர சிறப்பாசிரியர்களை தகுதியுடையவர்களாக கருத்தில் கொள்ள வேண்டும்.

பகுதி நேர சிறப்பாசிரியர்களின் ஊதியத்தை ரூ.7,700-லிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



No comments:

Post a Comment