JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, November 4, 2018

பாட புத்தகம் கிடைக்காமல் போட்டி தேர்வர்கள் அவதி!

டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டி தேர்வு எழுதும் தேர்வர்கள், தமிழக அரசின் பாட புத்தகங்கள் சரியாக கிடைக்காததால், அவதிக்கு ஆளாகியுள்ளனர்.




தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் - 1, குரூப் - 2 மற்றும், குரூப் - 4 என, பல போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதே போல், யு.பி.எஸ்.சி., என்ற குடிமை பணிகள் சேவை ஆணையம் சார்பில், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு, தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இவற்றில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் பெரும்பாலும், தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டப்படியே, வினாத்தாள் இடம் பெறுகிறது.

இதனால், டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள், போட்டி தேர்வுக்கு தயாராவதற்கு, தமிழக பாடத்திட்ட புத்தகங்களை வாங்குகின்றனர். பெரும்பாலான இடங்களில்,பாட திட்ட புத்தகங்கள் கிடைக்காமல், தேர்வர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.பல மாவட்டங்களில், மாவட்ட தலைநகரங்களில் மட்டுமே, பாட திட்ட விற்பனை மையம் செயல்படுகிறது. இதனால், தேர்வர்கள், 50 கி.மீ.,க்கு மேல், பயணம் செய்து வந்தால், சில புத்தகங்கள் இருப்பு இல்லை என, விற்பனை மையத்தினர் கைவிரிக்கின்றனர். தேர்வர்கள் பல முறை அலைச்சலுக்கு ஆளாகின்றனர்.



சென்னையிலும், டி.பி.ஐ., வளாகம் மற்றும் அண்ணா நுாலக வளாகத்தில் மட்டுமே, பாட புத்தகங்கள் விற்கப்படுகின்றன. தேர்வர்கள் அலைச்சல் இன்றி, ஆன்லைனில் வாங்கலாம் என, தமிழ்நாடு பாட நுால் கழக அதிகாரிகள் கூறினர்.பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளிகள் மட்டுமே, ஆன்லைனில் வாங்கும் வகையில், வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாறாக பொதுமக்களோ, பெற்றோரோ, தேர்வரோ பதிவு செய்து வாங்க, வசதிகள் செய்யப்படவில்லை என, தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.