JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, November 3, 2018

உள்நாட்டிலேயே தயாரான முதல் மைக்ரோப்ராசசர்.. சைபர் தாக்குதலில் தப்பிக்கலாம்.. ஐஐடி மெட்ராஸ் அசத்தல்!

சென்னை: முதல் முறையாக, உள்நாட்டில் உருவாகியுள்ள,
மைக்ரோப்ராசசர் விரைவில் உங்கள் செல்போன்களில் செயல்பட போகிறது. சென்னை ஐஐடி தயாரித்துள்ள இந்த மைக்ரோப்ராசசருக்கு, 'சக்தி' என்று பெயரிடப்பட்டுள்ளது.



சக்தி மைக்ரோப்ராசசர், சென்னையிலுள்ள ஐஐடியால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. சண்டிகரிலுள்ள இஸ்ரோ அமைப்பின், செமி-கன்டக்டர் ஆய்வுக்கூடத்தில் வைத்து சக்தி மைக்ரோப்ராசசர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மைக்ரோப்ராசசர் தேவைக்காக, இறக்குமதியை சார்ந்து இருப்பது குறையும். பிற நாட்டு சைபர் தாக்குதல்களிலிருந்து, இந்திய நிறுவனங்கள், குறிப்பாக, பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்களில் இந்த மைக்ரோப்ராசசர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப்போகிறது.

ஐஐடி சென்னையின் தலைமை ஆய்வாளர்களில் ஒருவரான, பேராசிரியர் காமகோடி வீழிநாதன், இதுபற்றி கூறுகையில், மைக்ரோப்ராசசர் வடிவமைப்பு ஓபன் சோர்ஸ் மூலமாக பெறப்பட்டது. மைக்ரோப்ராசசருக்கு தேவையான, அடிப்படை கட்டளைகள் RISC V என்று அழைக்கப்படுகிறது. இது, எந்த வகை உபகரணங்களிலும் பொருந்தக்கூடியது.

செயலாக்கத்தை உறுதி செய்யும் அளவிக்கான டிசைன் இது. வெவ்வேறு உபகரணங்களுக்கு, வெவ்வேறு, வகை ஹார்டுவேர்கள் தேவைப்படுகிறது. புதிய கட்டளைகளும் தேவைப்படும். ஆனால் சக்தி மைக்ரோப்ராசசர் அனைத்து வகை தேவைக்கும் பொதுவாக ஈடு செய்ய கூடியது என்றார் அவர்.



முற்றிலும் இந்தியாவிலேயே ஜூலை மாதம் மைக்ரோப்ராசசர் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 300 சிப்ஸ் தயாரிக்கப்பட்டு, அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்திலுள்ள இன்டெல் நிறுவனத்தில் ஃபேப்ரிகேட்டட் செய்யப்பட்டு, லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் மூலமாக பூஸ்ட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்போது முழுக்க முழுக்க ஃபேப்ரிகேட் பணிகளும் இந்தியாவிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

வாஷிங்மெஷின் அல்லது சிசிடிவி கேமரா போன்ற பல உபகரணங்களில் இவற்றை பயன்படுத்த முடியும். ஆனால் அமெரிக்காவில் ஃபேப்ரிகேட்டட் செய்யப்பட்ட சிப்கள் குறைந்த மின்சாரத்தை எடுத்து இயங்க கூடிய திறன் மிக்கவை என்பதால் அவற்றை செல்போன்களிலும் பயன்படுத்த முடியும்.

இந்த மைக்ரோப்ராசசர் ஏற்கனவே, இந்திய தொழில்துறையை ஈர்த்துள்ளது. 13 நிறுவனங்கள் மெட்ராஸ் ஐஐடியை தொடர்பு கொண்டு இதற்கான தேவையை கேட்டுள்ளன.



இதே குழு இப்போது பராசக்தி என்ற பெயரில் சக்தியைவிட வலிமை வாய்ந்த மைக்ரோப்ராசசர் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதை சூப்பர் கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த முடியும். 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், இந்த சூப்பர் ஸ்கேலர் ப்ராசசர் பணிகள் முடிவடையுமாம்.