JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, December 5, 2018

வளாகத் தேர்வு: ஐஐடி மாணவர்களுக்கு 30 சதவீதம் கூடுதல் வேலைவாய்ப்புகள்

சென்னை ஐஐடி-யில் நடைபெற்று வரும் வளாகத் தேர்வின் முதல்கட்ட முகாமில், கடந்த ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் கூடுதல் வேலைவாய்ப்புகளை மாணவர்கள் பெற்றுள்ளனர்.



வளாகத் தேர்வில் பங்கேற்ற 133 நிறுவனங்கள் மொத்தம் 680 வேலைவாய்ப்புகளை மாணவர்களுக்கு அளித்துள்ளன.

சென்னை ஐஐடி-யில் ஒவ்வொரு ஆண்டும் வளாகத் தேர்வுகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. இதில் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்று வேலைவாய்ப்புக்காக மாணவர்களைத் தேர்வு செய்து வருகின்றன. அதுபோல 2018 ஆம் ஆண்டுக்கான முதல்கட்ட வளாகத் தேர்வு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது.

திங்கள்கிழமையுடன் மூன்று நாள்கள் முடிவடைந்த நிலையில், வெளிநாடு மற்றும் உள்நாடுகளைச் சேர்ந்த 133 நிறுவனங்கள் 680 வாய்ப்புகளை மாணவர்களுக்கு அளித்துள்ளன.

இதுகுறித்து சென்னை ஐஐடி ஆலோசகர் (வேலைவாய்ப்பு) பேராசிரியர் சந்தானம் கூறியதாவது:



வளாகத் தேர்வு தொடங்கி மூன்று நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில் மாணவர்கள் 680 வேலைவாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 30 சதவீதம் கூடுதலாகும்.

குறிப்பாக மைக்ரான் தொழில்நுட்ப நிறுவனம் 26 வாய்ப்புகள், இந்திய இன்டெல் தொழில்நுட்ப நிறுவனம் 26 வாய்ப்புகள், மைக்ரோசாப்ட் 25 , சிட்டிபேங்க் 22, குவால்கம் 21 , இ.வொய். நிறுவனம் 17 , எக்ùஸல் அனல்டிகல்ஸ் 17 , பிளிப்கார்ட் 16 , ஜி.இ. 14 , மஹிந்திரா அண்டு மஹிந்திரா 14 வாய்ப்புகள் அளித்துள்ளன. இது தவிர மேலும் சில நிறுவனங்களும் அதிக வேலைவாய்ப்புகளை அளித்துள்ளன. 




இவற்றில் 13 சர்வதேச நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளையும் மாணவர்கள் பெற்றிருக்கின்றனர். முதல் கட்ட வளாகத் தேர்வு முடிவடைய இன்னும் 4 நாள்கள் இருப்பதால், மாணவர்கள் பெறும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment