அதிக பண பரிவர்த்தனை செய்தும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லையா?

வருமானவரித்துறையிடம் இருந்து எஸ்எம்எஸ் வந்த பிறகும் வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். அதன்பிறகும் தாக்கல் செய்ய தவறினால் சட்ட நடவடிக்கை பாயும் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறியவர்களுக்கு வருமான வரித்துறை எஸ்எம்எஸ் அனுப்பி நினைவூட்டி வருகிறது. குறிப்பாக, அதிக மதிப்பிலான பண பரிவர்த்தனை செய்தும் கணக்கு தாக்கல் செய்யாமல் நழுவியவர்களை கண்காணித்து வருகிறது. இவர்கள் வருமான வரித்துறையிடம் இருந்து எஸ்எம்எஸ் வந்த பிறகு 21 நாட்களுக்குள் கணக்கு தாக்கல் செய்யலாம் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்த ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், 2017-18 நிதியாண்டில் அதிக மதிப்பிலான பண பரிவர்த்தனை செய்த பலர், 2018-19 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை.



இவர்களுக்கு வருமான வரித்துறை எஸ்எம்எஸ் வந்த பிறகு 21 நாட்களுக்குள் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அல்லது உரிய காரணத்தை மேற்கண்ட அவகாசத்துக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். தவறியவர்கள் மீது வருமான வரிச்சட்டம் 1961 பிரிவுகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உயர் மதிப்பிலான பரிவர்த்தனை விவரங்கள் அனைத்தும் நிதி பரிவர்த்தனை அறிக்கை, டிடிஎஸ், சிசிஎஸ், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள், ஏற்றுமதி மறறும் இறக்குமதி விவரங்கள் மூலம் பெறப்படுகிறது.



இவற்றின் மூலம், கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் மேற்கொண்ட பரிவர்த்தனை விவரங்களை வருமான வரித்துறை ஆராய்ந்து வருகிறது. வருமான வரித்துறைக்கு சரியான விளக்கம் அளித்தால் நடவடிக்கை வராது என மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
Share:

Categories