ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியை உள்ளடக்கிய கல்வித் திட்டத்தில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநர்கள், இதரப் பணியாளர்கள் 700க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியை உள்ளடக்கிய(எஸ்எஸ்ஏ) திட்டத்தில் தமிழக பள்ளிகளில் படிக்கும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி, இயன்முறைப் பயிற்சி, ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் அளித்து வரும் சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள், பகல் நேர பாதுகாப்பு மைய பாதுகாவலர், உதவியாளர் ஆகியோர் கடந்த 1998 முதல் மாவட்ட தொடக்க கல்வித் திட்டத்திலும், 2002 முதல் அனைவருக்கும் கல்வி இயக்கத்திலும் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் மேற்பார்வையில் அனைத்து பள்ளிகளிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் மாற்றுத் திறனாளி குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், 2002ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் சிறப்பு பயிற்றுநர்கள் பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்துப் பணியாளர்களும் தற்காலிக அங்கீகாரத்தோடு பணியாற்றி வருகின்றனர்.
எனவே எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி வரன்முறை உருவாக்கித்தர வேண்டும். இந்த திட்டத்தில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள மையங்களில் பணியாற்றி வரும் ஒருங்கிணைப்பாளர்களை சிறப்புக் கல்வி பயின்றவர்களை பணியமர்த்த வேண்டும். சிறப்பு பயிற்றுநர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ₹35 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வந்தனர்.
அனைவருக்கும் கல்வித்திட்ட மாநில திட்ட இயக்குநர் இது குறித்து நடவடிக்கை எடுக்காத நிலையில் சிறப்பு பயிற்றுநர்கள் உள்ள இதர பணியாளர்கள் சுமார் 700 பேர், டிபிஐ வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.கல்வி சார்ந்த விவரங்களை உடனுக்குடன் அறிய இணைந்திடுவீர்
Join Our WhatsApp Group
Click Here
Join Our Facebook Page
Click Here