Join THAMIZHKADAL WhatsApp Groups

5 ஏக்கருக்குக் குறைவாக வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை தமிழக முதல்வர் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 24) தொடங்கி வைக்கிறார்.
இத் திட்டத்தின் கீழ், தமிழகத்தைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓரிரு நாள்களில் அவர்களது வங்கிக் கணக்கில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கிடைக்க வேளாண்மைத் துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.
இந்தியாவில் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத் திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கணக்கெடுப்பு: மத்திய அரசின் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பெறத் தகுதியான விவசாயிகளைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்புப் பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் சுமார் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டறியப்பட்டுள்ளனர்.
இப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவை பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் தொடங்கி வைக்கிறார்.அதைப் போல, தமிழகத்திலும் தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னையில் ஆயிரம் விவசாயிகள்: சென்னை கலைவாணர் அரங்கத்தில்ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு விவசாயிகளுக்கு
ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கவுள்ளனர். இந் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சுமார் ஆயிரம் விவசாயிகள் சென்னை வந்துள்ளனர்.