JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, February 15, 2019

அரசுப் பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியை மீது கத்தியால் தாக்குதல் ..! தாலி பறிப்பு

ஓசூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் தலைமை ஆசிரியரை கத்தியால் வெட்டி நகை மற்றும் பணத்தை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி ஒன்றியத்திற்குட்பட்ட நாகசத்திரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. வியாழக்கிழமை மதியம் தலைமை ஆசிரியை கஜலட்சுமி மாணவர்களுக்கு வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.



அப்போது முகமூடி அணிந்த படி கையில் கத்தி மற்றும் உருட்டுக்கட்டையுடன் நுழைந்த 2 பேர் ஆசிரியை கஜலட்சுமியை தாக்க முயன்றனர். கையால் தடுத்ததால் அவருக்கு கையில் வெட்டு விழுந்தது. அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க தாலி சங்கிலியை பறித்துக் கொண்ட கொள்ளையன் ஒருவன், அவரது ஸ்மார்ட் போன் மற்றும் கைப்பையில் இருந்து 3500 ரூபாய் ரொக்கப்பணம் முதலியவற்றை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினான்.
இதை பார்த்த பள்ளியில் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர், கொள்ளையர்களை தடுக்க முயன்ற போது அவரையும் கத்தியால் தாக்கிவிட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மாணவ மாணவிகள் அலறினர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து ஆசிரியை மற்றும் பெயிண்டரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்


பள்ளிக்குள் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து கைவரிசை காட்டுவது இதுவே முதல் முறை என்பதால் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். அந்த பகுதியில் நாளுக்கு நாள் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் அத்தலவாடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற லட்சுமி நாராயணான் என்பவரை வழி மறித்து தாக்கிய கொள்ளையர்கள் 15 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றதால் மக்கள் பணத்துடன் தனியாக வெளியே செல்ல அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது காவல்துறையினர் ரோந்துபணியை தீவிரப்படுத்துவதோடு முகமூடி கொள்ளையர்களை கைது செய்து. மக்களின் அச்சம் போக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.