Search This Blog

Tuesday, March 5, 2019

அரசு மேல்நிலை பள்ளிகளில், அடுத்த கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 'ஸ்மார்ட்' வகுப்புகள் நடத்த உத்தரவு

0 comments
அரசு மேல்நிலை பள்ளிகளில், அடுத்த கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 'ஸ்மார்ட்' வகுப்புகள் நடத்த, உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசின் பல்வேறு துறைகளின் கீழ், 37 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன.

இவற்றில், 3,000 அரசு மேல்நிலை பள்ளிகளில், 20 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில் பணியாற்றும், 87 ஆயிரம் ஆசிரியர்களில், 29 ஆயிரத்து, 965 முதுநிலை ஆசிரியர்கள் உள்ளனர்.முதுநிலை ஆசிரியர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், இலவசமாக லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார். பொது தேர்வு பணிகள் முடிந்ததும், அனைத்து முதுநிலை ஆசிரியர்களுக்கும், 23 ஆயிரம் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், இலவச லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த லேப்டாப்களை பயன்படுத்தி, ஆசிரியர்கள் வீட்டில் இருக்கும்போதும், பயோமெட்ரிக் பதிவு முறை, பள்ளிகளின் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள், பள்ளி கல்வியின் ஆன்லைன் நிர்வாக முறைகளை மேற்கொள்ள முடியும்.அதேபோல, தொடக்க பள்ளி மாணவர்களுக்கு உள்ளது போல், வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கும், ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

அப்போது, முதுநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப்களை பயன்படுத்தி, ஆன்லைன் வழி பாடங்கள் மற்றும் புதிய பாட திட்டத்தின், க்யூ.ஆர்.கோடு முறைகளில் பாடங்களை நடத்த, பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது.