Search This Blog

Thursday, March 21, 2019

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே ஆவணத்தில் மதிப்பெண், கல்விச் சான்றிதழ்: சிபிஎஸ்இ முடிவு

0 comments
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மூலம் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் மற்றும் கல்விச் சான்றிதழை ஒரே ஆவணமாக வழங்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.


தற்போது 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான மதிப்பெண் மற்றும் கல்விச் சான்றிதழ் தனித் தனியாக வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இவற்றை ஒரே ஆவணத்தில் வழங்கவும், பன்னிரெண்டாம் வகுப்புக்கு வழக்கம் போல மதிப்பெண் சான்றிதழ் மற்றும் கல்விச் சான்றிதழை தனித் தனியாக வழங்கவும் முடிவு செய்திருப்பதாக சிபிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஎஸ்இ தேர்வுக் குழு முடிவு எடுத்துள்ளது. மேலும், இந்த முடிவை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் ஆட்சிக் குழுவும் ஏற்றுக் கொண்டுள்ளது.


இது தொடர்பாக சிபிஎஸ்இ அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 2019- ஆம் ஆண்டில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பெண் மற்றும் கல்விச் சான்றிதழ் ஆகியவை இரண்டும் சேர்த்து ஒரே ஆவணமாக வழங்கப்பட உள்ளது.
எனினும், 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் எழுதும் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் மற்றும் கல்விச் சான்றிதழை தனித்தனியாக பெறுவது தொடரும் என்றார்.