JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, March 24, 2019

மாணவர்களுக்கான முழுநேர இலவச நீட் பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் 11 மையங்களில் நாளைமுதல் தொடங்குகிறது

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுநேர ஒரு மாத கால நீட் பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்பட உள்ளன. நமது நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சியை உயர்த்த, தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் மாலை நேரத்திலும், வார விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பாகவும் நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கிடையே பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங் கியது. இதனால் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக ஏதுவாக நீட் பயிற்சி பிப்ரவரி 3-வது வாரம் முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 19-ம் தேதியுடன் முடிந்துவிட்டன. இதையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுநேர நீட் பயிற்சி வகுப்புகள் நாளை முதல் (மார்ச் 25) தொடங்கப்பட உள்ளன.

இதற்காக நீட் பயிற்சி வகுப்புகளில் சிறந்து விளங்கிய 9 ஆயிரத்து 800 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த ஆண்டை போல சென்னை உட்பட நகரங்களில் உள்ள 11 தனியார் கல்லுாரிகளின் வளாகத்தில் உணவு, தங்கும் வசதிகளுடன் காலை முதல் மாலை வரை இந்த சிறப்பு பயிற்சி வழங்கப்பட முடிவாகியுள்ளது. நீட் பயிற்சி அனுபவம் பெற்ற பேராசிரியர்கள் மற்றும் வெளி மாநில நிபுணர்களைக் கொண்டு மே 3-ம் தேதி வரை இந்த பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை வெளியீடு இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘போட்டித் தேர்வுகளுக்கு மாநிலம் முழுவதும் தேர்வான அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் (மார்ச் 25) நேரடியான முழுநேர பயிற்சி வகுப்புகள் 4 மண்டலங்களில் 11 மையங்களில் உண்டு உறைவிட பயிற்சியாக ஒரு மாதகாலம் வழங்கப்பட உள்ளது. பதிவு செய்து தேர்வு செய்யப்படாத இதர மாணவர்களை அந்தந்த மாவட்டங்களில் விசாட் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் பயிற்சி மையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், ஜேஇஇ போட்டித் தேர்வுக்கு பதிவு செய்த மாணவர் களை ஆங்கில வழிப் பயிற்சி மையத்துக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மையத்துக்கும் 2 பொறுப்பாசிரியர்களை நியமித்து பயிற்சியை திறம்பட நடத்த வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.