Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 1, 2019

18 வருடமாக தூக்கி சுமக்கும் தாய்- வக்கீலுக்கு படிக்க விரும்பும் 2½ அடி உயர கல்லூரி மாணவி (வீடியோ இணைப்பு)





உருகண்டு எள்ளாமை வேண்டும் என்பது முன்னோர் வாக்கு. சிறிய விதையில் இருந்துதான் பெரிய விருச்சம் தோன்றுகிறது. 2½ அடி உயரம் கொண்ட மாணவி ஒருவர் கல்லூரியில் படித்து வருகிறார். அவரை தினமும் கல்லூரிக்கு தாய் சுமந்து செல்கிறார். அம்மாணவி படித்து வக்கீலாக விரும்புகிறார். மனதை தொடும் இவர்கள் பற்றிய தகவல்கள் வருமாறு:-

நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மேக்கிரி மங்கலத்தை சேர்ந்த பழனிசாமி-தேவகி தம்பதியின் மகள் பாரதி (வயது 18). இவர் போதிய உயரம் வளராமல் 2½ அடியில் குள்ளமாக உள்ளார். இருந்தபோதிலும் இவருக்கு படித்து பெயர் புகழுடன் வாழ வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அந்த எண்ணத்தை வெறும் கனவாக்கி விடாமல் நனவாக்கும் புதுமை பெண்ணாக பாரதி திகழ்கிறார். தற்போது இவர் மயிலாடுதுறை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் படித்து வருகிறார்.



மகள் பாதுகாப்பாக கல்லூரிக்கு சென்று வரவேண்டும் என்பதற்காக தேவகி தினமும் காலையிலேயே வீட்டு வேலைகளை முடித்து விட்டு மகளுடன் காலை 7.30 மணிக்கு கல்லூரிக்கு புறப்பட்டு செல்கிறார். அவருடன் 18.கி.மீ. பயணம் செய்து கல்லூரி வகுப்பறையில் விடுகிறார். பின்னர் மாலை வரை அங்கேயே காத்திருந்து கல்லூரி நேரம் முடிந்ததும் மகளை தூக்கி கொண்டு பஸ்சில் ஏறி வீட்டை வந்தடைகிறார்.



மகள் கல்விக்காக தேவகி கடந்த 18 ஆண்டுகளாக அவரை பள்ளிக்கு அழைத்து செல்வதிலும், கல்லூரிக்கு அழைத்து செல்வதிலும் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். மேக்கிரிமங்கலம், குத்தாலம் ஆகிய இடங்களில் உள்ள பள்ளியில் பாரதி தனது பள்ளி படிப்பை படித்து முடித்துள்ளார். பாரதி கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளார். 12ம் வகுப்பு படிக்கும் போது அவர் போபாலில் நடந்த ஆர்.எம்.எஸ்.ஏ. கலா உத்சவ் 2017 என்ற தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் இண்டாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.



தாயின் விருப்படி படித்து வேலைக்கு செல்வதே தனது லட்சியம் என்று கூறும் பாரதி தனக்கு படித்து வக்கீலாக வேண்டும் என்பதே லட்சியம் என்கிறார். 18 ஆண்டுகளாக மகளை தூக்கி சுமக்கும் தேவகி தனக்கு ஒரு இருசக்கரவாகனம் இருந்தால் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கத்திடம் இருசக்கரவாகனம் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார். தேவகிக்கு மேலும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பாரதியின் கனவும், தேவகியின் ஆசையும் நிறைவேற அனைவரும் வாழ்த்துவோம்.