JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, March 28, 2019

'வாரம் ஒருமுறை சாலைபாதுகாப்பு உறுதிமொழி' பள்ளிகளுக்கு இயக்குநரகம் உத்தரவு

'வாரத்தில் ஒருநாள், அனைத்து பள்ளி மாணவர்களும், காலை வழிபாட்டு கூட்டத்தில், சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.



பள்ளி கல்வி இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை:தமிழகத்தில், அதிகமான சாலைவிபத்துகள் ஏற்படுகின்றன. இந்திய தேசிய குற்றவியல் அறிக்கைப்படி, ஆண்டு தோறும், 65 ஆயிரம் பேர், சாலை விபத்தால் உயிரிழக்கின்றனர். இதில், 2017ம் ஆண்டில் மட்டும், 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், 569 பேர்.சாலை விதிகளை மீறுவதே, இதற்கு முக்கிய காரணம்.

எனவே, அனைத்து பள்ளிகளிலும் சாலை பாதுகாப்பு திட்டம், சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடுதல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், சாலை பாதுகாப்புமன்றம் உருவாக்குதல் உள்ளிட்ட, பல்வேறு திட்டங்களை, பள்ளிக் கல்வித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.இனி, வாரத்தில் ஒரு நாள், அனைத்து பள்ளிகளிலும், காலை வழிபாட்டுக் கூட்டத்தில், விழிப்புணர்வு வாசகங்களை, உறுதிமொழியாக எடுக்க வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்கள், இதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.'விதிகளை பின்பற்றுவேன்'நான் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவேன்; நான் பழகியபின்னரே வாகனம் ஓட்டுவேன்; நான் ஓட்டுனர் உரிமம் பெற்ற பிறகே வாகனம் ஓட்டுவேன்;

நான் என் பெற்றோருக்கும், ஓட்டுநர்களுக்கும் வாகனம் ஓட்டும் போது, 'சீட் பெல்ட்' அல்லது 'ஹெல்மெட்' அணிந்து கொள்ள வேண்டுமென வற்புறுத்துவேன்.நான், என் ஓட்டுனர், வேகக் கட்டுப்பாட்டை மீறாதவாறு பார்த்துக் கொள்வேன்; ஓட்டுனர், வாகனத்தை ஓட்டும்போது, செல்போன் உபயோகிப்பதை அனுமதிக்க மாட்டேன்; என் ஓட்டுனர் அசதியாக இருக்கும்போது, வாகனம் ஓட்ட அனுமதிக்க மாட்டேன்.நான் ஆட்டோ அல்லது வேனில் பயணித்தால், அளவுக்கு மீறி பயணியரை ஏற்றுவதை அனுமதிக்க மாட்டேன்; நான் பேருந்தின் படிக்கட்டில் பயணிக்க மாட்டேன்.