`டைனோசர்கள் அழிந்த தினத்தன்று பூமியில் நடந்தது என்ன ?’ பதில் சொல்லும் புதைபடிமம்

பூமியில் பல ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மிகப் பெரிய உயிரினமான டைனோசர்கள் ஒரு காலத்துக்குப் பின்னர், முற்றிலுமாக அழிந்தன.

மிகப்பெரிய சுற்றளவைக் கொண்ட விண்கல் ஒன்று பூமியைத் தாக்கியதுதான் அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் எனப் பல ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைய மெக்சிகோவுக்கு அருகே உள்ள ஒரு பகுதியில் இந்த விண்கல் வந்து மோதியிருக்கக் கூடும். அதனால் ஏற்பட்ட பள்ளமானது Chicxulub என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 11 முதல் 81 கிலோமீட்டர் குறுக்களவைக் கொண்டதாக இருக்கலாம் எனக் கருதப்படும் அந்த மிகப்பெரிய விண்கல் மோதியபோது அதன் தாக்கம் பூமி முழுவதும் இருந்திருக்கிறது.

குறிப்பாகக் கடல் பகுதியில் அதன் தாக்கம் அதிக அளவில் இருந்திருக்கிறது. அதற்கான சான்றுகள் பல இடங்களில் கிடைத்து வருகின்றன. தற்போது அமெரிக்காவின் வடக்கு டகோட்டா பகுதியில் கிடைத்திருக்கும் புதைபடிமம் அதுபோல ஒன்றுதான். இதில் பல மீன்கள் இறந்து போய் வடிவம் மாறாமல் அப்படியே புதைபடிமமாக மாறியிருக்கின்றன. இதன் மூலமாக டைனோசர்கள் அழிந்த தினத்தன்று பூமியில் என்ன நடந்திருக்கும் என்பது தெரியவந்துள்ளது என ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

'விண்கல் பூமியைத் தாக்கி சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரம் கழித்து உருவான மிகப் பெரிய அலைகள் கடலில் இருந்து இந்த மீன்களை நிலத்தில் தூக்கி எறிந்திருக்கலாம் என்றும் அப்படியே அவை காலப்போக்கில் புதைபடிமமாக மாற்றம் பெற்றிருக்கலாம்' எனவும் புதைபடிம ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel