Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 24, 2019

பொய்யான செய்திகளை கண்டறிய வருகிறது புதிய தொழில்நுட்பம்



''சமூக வலை தளங்களில் பரவி வரும் பொய்யான செய்திகளை கண்டுபிடிக்க, 'பிளாக் செயின்' எனும் தொழில்நுட்பத்தை, ரகுட்டன் மற்றும் கர்வ்பால் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி வருகின்றன,'' என, ரகுட்டன் நிறுவனத்தின், இந்தியாவுக்கான முதன்மை செயல் அதிகாரி சுனில் கோபிநாத், பெங்களூரில் நேற்று தெரிவித்தார்.பெங்களூரு, சி.வி. ராமன் சாலையிலுள்ள, ஐ.ஐ.எஸ்.சி., எனும் இந்திய அறிவியல் கழகத்தின், ஜே.என்., டாடா அரங்கத்தில், 'கிரேட் இன்டர்நேஷனல் டெவலப்பர் சம்மிட் - 2019' எனும் உச்சி மாநாடு நடந்து வருகிறது. 22ம் தேதி துவங்கிய இம்மாநாடு, 26ம் தேதி வரை நடக்கிறது.

நேற்று நடந்த மாநாட்டில், 'ஆன்லைன்' தொழிலில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும், ரகுட்டன் நிறுவனத்தின், இந்தியாவுக்கான முதன்மை செயல் அதிகாரி, சுனில் கோபிநாத் பங்கேற்று பேசினார்.அவர் பேசியதாவது:
ஆன்லைன் தொழில் நிறுவனங்களில், முன்னணி நிறுவனமாக ரகுட்டன் விளங்கி வருகிறது; ஜப்பான் உட்பட, பல நாடுகளில் இயங்கி வருகிறது. முகம், பொருட்கள் பார்த்து அறிதல் போன்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தகம் செய்கிறோம்.ஜப்பானில் மட்டுமே, 80 லட்சம் வாடிக்கையாளர்களும்; உலகம் முழுவதும், 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களும் உள்ளனர்.சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் அதிகளவில் பரப்பப்படுகின்றன. இது, சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.இன்றைய கால கட்டத்தில், சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துவதால், அதில் வரும் பொய்யான செய்திகளையும், உண்மையாக நம்புகின்றனர்.


இது, பெரிய சவாலாக அமைந்துள்ளது.பொய்யான செய்திகளை கண்டுபிடித்து, உண்மையான செய்திகள் வெளியிடும் வகையில், பிளாக்செயின் எனும் தொழில்நுட்பத்தை, ரகுட்டன் மற்றும் கர்வ்பால் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி வருகின்றன.பொய்யான செய்திகளை கண்டுபிடிக்க, புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவது இதுவே முதன்முறை. இதன் மூலம், உண்மையான செய்திகள் வெளியிடவுள்ளோம்.
எங்கள் நிறுவனத்துடன், 'தினமலர்' நிறுவனம் இணைந்துள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.ரகுட்டன் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஓலிவர், பிளாக் செயின் பிரிவு பொறுப்பாளர்

ஹிசாடா நாஹோஜ், கர்வ்பால் கணேஷ் கவுஷிக், பி.டி.ஐ., தலைமை ஆசிரியர் விஜய் ஜோஷி உட்பட, பலர் பங்கேற்றனர்.'பிளாக் செயின்' என்றால் என்ன?குறிப்பிட்ட தகவல் எங்கிருந்து வந்தது. இதை எப்படி பரவ செய்தனர். யார் செய்தனர் என்பதை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் தான் பிளாக்செயின். இந்த வகையில், சமூக வலை தளங்களில் வரும் பொய்யான செய்திகளை கண்டுபிடிக்க முடியும்.