Subscribe Us

Sunday, April 14, 2019

செவ்வாய் கிரகத்தில் உயிரனங்கள் : அண்டார்டிகா விண்கல் அளிக்கும் ஊகம்

வாஷிங்டன் அண்டார்டிகாவில் கிடைத்த விண்கல் செவ்வாய்கிரகத்தில் இருந்து விழுந்துள்ளதால் அங்குள்ள உயிரனங்கள் குறித்த ஆய்வுக்கு பல ஊகங்கள் கிடைத்துள்ளன.



சூரிய குடும்பத்தில் பூமிக்கு மிக அருகில் உள்ள செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் எனவும் அல்லது இருந்திருக்க கூடும் எனவும் வானிலை விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அங்கு மனிதன் வசிக்க சாத்தியம் இல்லாத நிலை இருந்தாலும் மற்ற வேற்று கிரக வாசிகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இது குறித்து விஞ்ஞான பத்திரிகையான 'ஓப்பன் ஆஸ்டிரானமி' (திறந்த விண்வெளி) யில் ஒரு விஞ்ஞான கட்டுரை வெளியாகி உள்ளது. இல்டிகோ கியோல்டி என்னும் விஞ்ஞானி எழுதி உள்ள அந்த கட்டுரையில் அவர், 'இந்த ஆய்வு கிரகங்கள், பூமி, உயிரின வளர்ச்சி, ரசாயனம் மற்றும் சுற்றுசூழல் விஞ்ஞானம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். இந்த துறையில் உள்ள அனைவருக்கும் இது பயன்படும்.

இந்த ஆய்வின் மூலம் விண்கல், உயிரின வளர்ச்சி ஆகியவை குறித்த பல முக்கிய தகவல்கள் தெரிய வரும்' என தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கட்டுரையில், 'கடந்த 1977 ஆம் ஆண்டு ஜப்பான் தேசிய துருவ ஆய்வகம் ஒரு அரிய விண்கல் செவ்வாய் கிரகத்தில் இருந்து அண்டார்டிகாவில் விழுந்ததை ஆய்வு செய்துள்ளது. சுமார் 17.5 கோடி வருடங்களுக்கு முந்தைய அந்தக் கல்லில் பல பழைய உலோக தாதுக்கள் இருந்துளன. அத்துடன் அந்த விண்கல் இருந்த இடத்தில் பல உயிரினங்கள் வசித்து வந்ததற்கான அடையாளங்களும் தென்பட்டுள்ளன.
இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசித்திருக்க வாய்ப்பு உள்ளது.

இந்த விண்கல் மூலம் நம்மால் இதை அறிந்துக் கொள்ள முடிகிறது. அவற்றில் ஒரு சில இன்னும் அந்த கிரகத்தில் வாழலாம் எனவும் நம்பிக்கை உள்ளது. எனவே இது குறித்து மேலும் ஆய்வு நடத்த இந்த விண்கல் உதவும் என தெரிய வந்துள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular Feed