
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையிலிருக்கும் அக்ரிபாடா பேபி கார்டன் பகுதியை சேர்ந்த ஐந்து மற்றும் ஏழு வயது சிறுமிகள் அங்கு உள்ள பூங்காவில் விளையாடச் சென்றனர். சிறுமிகள் இருவரும் விளையாட சென்று அதிக நேரமாகியதால்., அவர்களின் பெற்றோர் பூங்காவிற்கு சென்று சோதித்ததில் அவர்கள் இருவரும் பூங்காவில் இல்லை. இருவரும் அக்கம்பக்கத்தில் உள்ள நண்பர்களின் இல்லத்திற்கு சென்று இருக்கலாம் என்று நினைத்து., அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளிலும் தேடியுள்ளனர்.
சிறுமிகள் இருவரும் கிடைக்காததால் பதற்றம் அடைந்த பெற்றோர்., இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இவர்களின் புகாரை ஏற்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ளத் துவங்கினர். அந்த விசாரணையில்., அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்ததில்., சிறுமிகள் பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்த சமயத்தில் சிவப்பு நிறத்திலான சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் சிறுமிகள் இருவரையும் கடத்தி சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிவப்பு நிறத்திலான சட்டையை அணிந்த நபர் குறித்த தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட துவங்கினர்.
அந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட சிறுமியை கடத்திய நபர் மும்பையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக சிறுமிகளை அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வாலிபரை மடக்கிப் பிடித்தனர். மேலும்., அவர் வசம் இருந்த கடத்தப்பட்ட 2 சிறுமிகளையும் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் கைதான வாலிபரின் பெயர் கவுரவ் மகாதிக் (வயது 19) என்பதும்., அவர் மீது காவல்துறையினர் சிறுமிகளை கடத்திச் சென்றது குறித்த வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் சிறுமி சுமார் 12 மணி நேரத்துக்குள் மீட்கப்பட்டு அவர்களின் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். இந்தச் சிறுமிகளை பெற்றோர் வசம் ஒப்படைத்த உடன் கண்ணீர் மல்க அவர்கள் காவல் துறையினருக்கு நன்றியை தெரிவித்து குழந்தைகளை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.





