Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 16, 2019

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை: ஜூன் 6 முதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்


எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடைமுறைகள், அடுத்த மாதம் 6-ஆம் தேதி தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ தெரிவித்தார்.


தமிழகத்தில் தற்போது 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியும் நிகழாண்டு முதல் அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, கரூரில் புதிதாக மருத்துவக் கல்லூரி ஒன்று இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இதனால் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு நிலவரப்படி பெருந்துறை கல்லூரியிலும் சேர்த்து 3,000 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்தன. அவற்றில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்டன.

இதனிடையே, கரூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இதேபோல், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்கள் கிடைத்துள்ளன.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 95 இடங்களுக்கும் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழாண்டில் கூடுதலாக 345 எம்பிபிஎஸ் இடங்கள் தமிழக கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிகிறது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசிடம் உள்ளது. இவை தவிர, தனியார் கல்லூரிகளில் இருந்து சுமார் 700 எம்பிபிஎஸ் இடங்களும், 1,100 பிடிஎஸ் இடங்களும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாகும்.
இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2019 - 20-ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6-ஆம் தேதி முதல் www.tn.health.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். ஜூன் 26-ம் தேதி, முதல்கட்ட கலந்தாய்வு தொடங்க திட்டமிட்டிருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ கூறியதாவது: நாடுமுழுவதும் நடந்த நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ஆம் தேதி வெளியாக உள்ளன. ஜூன் 6-ஆம் தேதி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்து, விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.