JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, May 19, 2019

தனியார் பள்ளிகளுக்கான அனுமதி, அங்கீகாரத்தை ஆய்வு செய்ய உத்தரவு

தனியார் பள்ளிகளுக்கான அனுமதி மற்றும் அங்கீகாரத்தை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அங்கீகாரம் இல்லாமலும், அங்கீகார எண்களை போலியாக தயாரித்தும் சில பள்ளிகள் முறைகேடாக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மழலையர் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர மொழி வழி பள்ளிகளில் ஆய்வு செய்யுமாறு, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த ஆய்வின்போது பள்ளிகள் தொடங்குவதற்காக வழங்கப்பட்ட தொடக்க அனுமதியையும், பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகார எண்களையும் தேதி வாரியாக ஆய்வு செய்ய வேண்டும். தற்காலிக தொடர் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா, அவ்வாறு பெற்றிருந்தால் அது எந்தத் தேதியில் பெறப்பட்டது என்பது குறித்தும் கேட்டறிய வேண்டும். மேலும், 3 வகை அங்கீகாரங்களும் முறையாக, கல்வியியல் மேலாண்மை தகவல் மைய இணையதளத்தில் ("எமிஸ்') பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மே 20 முதல் 22 வரை மூன்று நாள்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.