
WATCH VIDEO AND CLICK DOWNLOAD
வெளிப்படை, குறிப்பு (VELIPADAI, KURIPPU)
எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் ஆகிய இரண்டிலும் கூறப்படாத பொதுவான செய்திகள் சொல்லப்படுவதால் இது பொது என அழைக்கப்படுகிறது.
வெளிப்படை
ஒருசொல் வெளிப்படையாக எல்லாருக்கும் பொருள் புரியும் வண்ணம் பொருள் உணர்த்துவது வெளிப்படை எனப்படும்.
எ.டு. சூரியன், மழை, அரசன், மக்கள், விலங்கு, மரம், மலர் முதலாச் சொற்களும்,
பாரதி படித்தாள், திருக்குறள் உலகப் பொதுமறை, மரம் நடுவோம் மழை பெருவோம் முதலான தொடர்களும், வெளிப்படையாக எல்லாருக்கும் எளிதில் பொருள் புரியும் வகையில் உள்ளன. இவ்வாறு வெளிப்படையாகத் தன்பொருளை உணர்த்தும் சொல் வெளிப்படை எனப்படும்.
குறிப்பு
ஒருசொல் வெளிப்படையாக எல்லாருக்கும் பொருள் புரியும் வண்ணம் பொருள் உணர்த்தாமல் ஏதேனும் ஒருகுறிப்பால் பொருளை உணர்த்துவது குறிப்பு எனப்படும்.
எ.டு.
1. உலகிலேயே பண்பாட்டில் தமிழ்நாடுதான் தலைசிறந்து விளங்குகின்றது.
2. பூப்பந்து விளையாட்டில் தமிழ்நாடு முதலிடம் பெற்றது.
இவ்விரு தொடர்களையும் படித்துப் பாருங்கள். இரு தொடர்களிலும் தமிழ்நாடு என்னும் சொல் வந்துள்ளதைக் கவனியுங்கள்.
முதல் தொடரில் வந்துள்ள தமிழ்நாடு என்னும் சொல் வெளிப்படையாக இடத்தைக் குறித்து வந்துள்ளது.
இரண்டாம் தொடரில் தமிழ்நாடு என்பது ஆகுபெயராய் நின்று குறிப்பால் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களைக் குறிக்கிறது.
இவ்வாறு, ஒரு தொடர் முன்னும் பின்னும் வருகின்ற சொற்கள் உணர்த்தும் குறிப்பால் ஒரு பொருளைத் தருவது குறிப்பு எனப்படும்.
குறிப்புச்சொற்கள்
குறிப்பால் பொருள் உணர்த்துவனவாக, குறிப்புச்சொல், ஒன்றொழி பொதுச்சொல், செய்யுள் விகாரங்கள், தகுதி வழக்கு, ஆகுபெயர், அன்மொழித்தொகை, வினைக்குறிப்பு, முதல்குறிப்பு, தொகைக்குறிப்பு என இவையும் இவைபோல் பிறவும் அமைகின்றன.
ஒன்றொழி பொதுச்சொல் விகாரம் தகுதி
ஆகு பெயரின் மொழிவினைக் குறிப்பு
முதல்தொகை குறிப்போ டின்ன பிறவும்
குறிப்பின் தருமொழி அல்லன் வெளிப்படை – நன்னூல் 269.









