JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, June 21, 2019

நீட் விண்ணப்பத்தில் ஜாதியை தவறாக பதிவிட்டதை மாற்றம் செய்ய உத்தரவு

நீட் விண்ணப்பத்தில் ஜாதியை தவறாக பதிவிட்டதை மாற்றி, உரிய தரவரிசை பிரிவில் சேர்க்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், தாமரைக்குளத்தைச் சேர்ந்த மாறன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
எனது மகன் விக்ரம் பாலாஜி, கடந்த மே 5ல் நீட் தேர்வு எழுதினார். விண்ணப்ப படிவத்தில் எஸ்சி என்பதை தவறுதலாக ஓபிசி என நிரப்பிவிட்டோம். என் மகன் பெற்ற மதிப்பெண்ணிற்கு எஸ்சி பிரிவில் இடம் கிடைக்கும். ஓபிசி என்பதால், கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, விண்ணப்பத்திலுள்ள தவறை சரி செய்வது குறித்து அதிகாரிகளை சந்தித்தேன்


ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மருத்துவ படிப்பிற்கான கவுன்சலிங் நடந்து வருகிறது.
எனவே என் மகனின் நீட் விண்ணப்பத்தில் ஓபிசி என்பதை எஸ்சி என மாற்றவும், இதற்குரிய தரவரிசையில் முன்னுரிமை வழங்கவும், இதற்காக ஒரு எம்பிபிஎஸ் சீட்டை காலியாக வைத்திருக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், மனுதாரர் மகனின் நீட் விண்ணப்பத்தில் ஓபிசி என்பதை எஸ்சி என மாற்றம் செய்து, இதற்குரிய பிரிவில் தர வரிசையில் சேர்த்து, தேசிய தேர்வு முகமை 2 வாரத்தில் உரிய
நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.