JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, June 25, 2019

ஆதார் எண்ணை அடையாள சான்றாக பயன்படுத்துவதற்கான மசோதா தாக்கல்

வங்கி கணக்கு துவங்குவது, மொபைல் போன் இணைப்பு பெறுவது ஆகியவற்றுக்கு, ஆதார் அட்டை எண்ணை அடையாள சான்றாக, தானாக முன்வந்து இணைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில், நேற்று தாக்கல் செய்யப்பட்டது.



'மத்திய அரசின் நல திட்டங்களுக்கான மானியம் பெறுவது, மொபைல் போன் இணைப்பு பெறுவது, வங்கி கணக்கு துவங்குவது ஆகியவற்றுக்கு, ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்தது.பிரச்னைஇது தொடர்பான வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, 'ஆதார் சட்டம் செல்லும். அரசின் நல திட்ட மானியங்களை பெறுவதற்கு, ஆதார் எண் அவசியம். 'ஆனால், மொபைல் போன் இணைப்பு, வங்கி கணக்கு துவங்குவது ஆகியவற்றுக்கு, ஆதார் அவசியமில்லை' என,தீர்ப்பளித்தது.இதையடுத்து, வங்கி கணக்கு துவக்கம், மொபைல் போன் இணைப்பு ஆகியவற்றுக்கு, ஆதார் எண்ணை அடையாள சான்றாக, வாடிக்கையாளர்கள், தானாக முன்வந்து இணைக்க வகை செய்யும் அவசர சட்டத்தை, மார்ச்சில், மத்திய அரசு பிறப்பித்தது.



இதற்கிடையே, லோக்சபாவிற்கு தேர்தல் நடந்து, புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், இது தொடர்பான சட்ட திருத்த மசோதாவை, லோக்சபாவில் நேற்று, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.எதிர்ப்புஇதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, எம்.பி., பிரேமச்சந்திரன் பேசியதாவது:ஆதார் சட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில், இந்த மசோதா உள்ளது. இந்த மசோதா நிறைவேறினால், தனி நபரின் அடிப்படை விபரங்கள், தனியார் நிறுவனங்களுக்கு எளிதாக தெரிந்து விடும். இது, பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.இவ்வாறு, அவர் பேசினார்.



இதற்கு பதில் அளித்த, மத்திய அமைச்சர், ரவிசங்கர் பிரசாத், ''நீதிமன்ற தீர்ப்பை மீறும், எந்த ஓர் அம்சமும், இந்த மசோதாவில் இல்லை,'' என்றார்.ஆதார் சட்ட விதிமுறைகள், ஒழுங்குமுறைகள், உத்தரவுகள் ஆகியவற்றை மீறும் நிறுவனங்களுக்கு, அதிகபட்சமாக, ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கும் அம்சமும், இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளது.மத்திய அடையாள தகவல்தொகுப்பகத்தை அனுமதியின்றி பயன்படுத்துதல் அல்லது அதில் உள்ள தகவல்களை அழித்தல், திருத்தம் செய்தல்போன்ற குற்றங்களுக்கான சிறை தண்டனை, மூன்று ஆண்டிலிருந்து, 10 ஆண்டுகளாக அதிகரிக்கும் விதியும், இந்த மசோதாவில் உள்ளது.