சென்னை: தண்ணீர் பிரச்சனையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் சொல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. அன்றாட தேவை, குடிநீர் என அனைத்திற்கும் குடங்களுடன் அலைந்து வருகின்றனர் மக்கள்.
தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு திருவள்ளூர் உள்ளிட்ட பக்கத்து மாவட்ட விவசாயிகளின் போர் குழாய்களில் இருந்து தண்ணீர் பெற்று வருகிறது. இதேபோல் சிக்கராயபுரம் உள்ளிட்ட கல்குவாரிகளில் இருந்தும் தண்ணீரை பெற்று மக்களின் தாகத்தை போக்கி வருகிறது.
பள்ளிகளும் தண்ணீர் பிரச்சனையில் இருந்து தப்பவில்லை. மாணவர்களுக்கு புத்தகப் பையோடு குடிக்க தண்ணீர் பாட்டீலையும் கொடுத்து அனுப்புமாறு பெற்றோர்களின் செல்போனுக்கு குறுந்தகவல்களை பள்ளி நிர்வாகம் அனுப்பியது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் பள்ளிகளில் ஏற்படும் தண்ணீர் பிரச்சனைக்கு பெற்றோர் ஆசிரியர் கழம் மூலம் தீர்வு காணப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஒரு தகவல் தீயாய் பரவியது.