JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, June 22, 2019

அரசுப் பள்ளிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்: பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை


அரசுப் பள்ளிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதனைக் கண்காணிக்க மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடும் நிலை ஏற்பட்டதால், அவற்றை தவிர்க்க லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் தீவிரமடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளிலேயே கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் குடிநீரின்றி பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சில பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகள் மூடப்பட்டன.


இதையடுத்து பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மூலம் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பள்ளிகளுக்கு தற்போது லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஒரு மாணவருக்கு 5 லிட்டர் தண்ணீர்: ஒவ்வொரு மாணவருக்கும் தலா 5 லிட்டர் வீதம் தண்ணீர் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு லிட்டரை குடிக்கவும், 4 லிட்டர் தண்ணீரை கழிவறைக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தண்ணீர் விநியோகத்தை கண்காணிக்க அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தண்ணீர் தேவை குறித்த தகவலை தெரிவிக்க மாவட்ட அளவில் சிறப்பு தொலைபேசி வசதியும் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மழை பெய்து போதிய தண்ணீர் கிடைக்கும் வரையில், இதுபோன்ற சிறப்பு ஏற்பாடு பள்ளிகளுக்கு தொடர வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.