Breaking

Monday, July 15, 2019

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு ஆகஸ்டில் வெளியீடு


மத்திய பள்ளிக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) நடத்திய மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவு, அடுத்த மாதம் 18ம் தேதி வெளியாகும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மத்திய பள்ளிக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 12வது ஆசிரியர் தகுதித் தேர்வை சிபிஎஸ்இ நடத்தியது. இந்த தேர்வை கடந்த 7ம் தேதி சுமார் 20 லட்்சம் பேர் எழுதினர்.
தேர்வு நடந்தபின் 6 வாரங்களில் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ ஏற்கெனவே அறிவித்து இருந்தது. இதன்படி ஆகஸ்ட் 18ம் தேதி தேர்வு முடிவு வெளியாகும் என்றும் சிபிஎஸ்இ இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு எழுதிய நபர்கள் சிபிஎஸ்இ இணையதளமான www.ctet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்வைப் பொறுத்தவரையில் பொதுப் பிரிவினர் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற வேண்டும்.
அதன்படிபொதுப் பிரிவினர் 150 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண் பெற வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர் 150க்கு 82 மதிப்பெண் எடுக்க வேண்டும். தகுதிக்கான சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக நேரடியாக பணி நியமனம் வழங்கப்படமாட்டாது.

தகுதித் தேர்வு சான்று என்பது ஆசிரியர் பணிக்கான தகுதி மட்டுமே.மேற்கண்ட தேர்வு முடிவு ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாக உள்ளது. தேர்வு எழுதியவர்களுக்கு தனியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படமாட்டாது.அதனால் தேர்வு முடிவுகளை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் அதற்கான சான்றுகள் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.