JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, July 9, 2019

சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயிக்கும் திட்டமில்லை

நாடு முழுவதும் உள்ள மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியத்தை நிர்ணயிக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதைத் தெரிவித்தார்.மேலும், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், 36 சதவீத பள்ளிகள் இன்னும் மின்சார வசதியைப் பெறவில்லை என்று மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளித்தார்.



இதுதொடர்பாக அவர் கூறியதாவது:கடந்த 2017-18-ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையின்படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 63.14 சதவீத பள்ளிகள் மின்சார வசதியைப் பெற்றுள்ளன. எஞ்சிய 36 சதவீத பள்ளிகளில் மின்சார வசதி இல்லை. குறைந்தபட்சமாக, அஸ்ஸாமில் 24.28 சதவீத பள்ளிகள் மட்டுமே மின்சார வசதியைப் பெற்றுள்ளன. அதற்கு அடுத்தப்படியாக, மேகாலயத்தில் 26.34 சதவீத பள்ளிகள் மட்டுமே மின்சார வசதியைப் பெற்றுள்ளன. லட்சத்தீவுகளிலும், தாதர் நாகர் ஹவேலியிலும் அனைத்து பள்ளிகளும் மின்வசதியைப் பெற்றுள்ளன. தில்லியில் 99.93 சதவீத பள்ளிகள் மின்சார வசதியைப் பெற்றுள்ளன.



தீனதயாள் உபாத்யாய கிராம ஜோதி திட்டத்தின் கீழ்ஊரகப் பகுதிகளுக்கும், கிராமங்களுக்கும் மின்இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக மின்இணைப்பு தேவைப்படும் பள்ளிகள், மாநில மின்சார வாரியத்தை அணுகி, தற்போதைய விதிமுறைகளின்படி மின்இணைப்பு பெறலாம் என்றார் ரமேஷ் போக்ரியால்.