Search This Blog

Monday, July 15, 2019

அரசு பள்ளிகளில் மாணவர்களின் நலன் கருதி மகப்பேறு விடுமுறையின் போது தற்காலிக ஆசிரியை நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்

0 comments
அரசு பள்ளிகளில் மகப்பேறு விடுமுறையில் உள்ள ஆசிரியைகளுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியைகள் நியமிக்கலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். குமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் 2019-ம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான இலவச லேப்டாப் வழங்கும் விழா நாகர்கோவில் அருகே சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், `தமிழகத்தில் மட்டுமே மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை 54 லட்சத்து 44 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கி இருக்கிறோம். இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மாணவர்கள் நல்ல முறையில் படித்து, தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும். மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல, முயற்சி நின்றாலும்கூட மரணம்தான். எனவே முயற்சி செய்து நீங்கள் படித்து வெற்றி பெற வேண்டும்’ என்று கூறினார். மகப்பேறு காலத்தில் மாற்று ஆசிரியைகள்: நிகழ்ச்சிக்குபின் நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறுகையில், தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழி கல்வி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. இதுதொடர்பாக ஏற்கனவே தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மகப்பேறு விடுமுறையில் உள்ள ஆசிரியைகளுக்கு பதிலாக மாதந்தோறும் ₹10 ஆயிரம் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் நியமித்து கொள்ளலாம். அந்தந்த பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கங்கள் இதை முடிவு செய்யலாம். இதற்கான நிதியை தமிழக அரசு வழங்கும்’’ என்று அறிவித்தார்