Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 6, 2019

புதிய கல்விக்கொள்கை குறித்து கவலைப்பட தேவையில்லை: அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தில் 1 முதல் 8 வரை அனைவரும் தேர்ச்சி பெற்று வருவதால் புதிய கல்வி கொள்கை குறித்து கவலைப்பட தேவையில்லை’’ என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் கீழ்பவானி வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலத்தை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்தார். விழாவில், பயனாளிகளுக்கு குடும்ப அட்டைக்கான ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார்.



பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:


மாணவர்களுக்கு லேப்டாப்பிற்கு அடுத்து டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை அரசு பள்ளியில் ஆங்கில மொழி கற்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. அந்த கட்டணத்தை ரத்து செய்ததுடன் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடக்கப்பள்ளியிலும் இன்னும் இரண்டு வாரத்தில் பயோமெட்ரிக் கொண்டு வரப்படும். தமிழை விட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என பாட புத்தகத்தில் வந்துள்ளது.

தமிழ் மொழி 3,000 ஆண்டுக்கு முந்தைய மொழி என்பது தவறுதலாக 300 ஆண்டு என அச்சடிக்கப்பட்டு விட்டது. இதனால், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதற்காக கண்காணிக்க குழு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்காணித்து வருகின்றனர். புதிய கல்விக்கொள்கை குறித்து, கடந்த 26ம் தேதி தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை தான் என்பதை பிரதமரிடம், முதல்வர் தெளிவாக கூறி உள்ளார். இதுகுறித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விளக்கி உள்ளார்.


புதிய கல்வி கொள்கையின்படி 1, 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு நடைபெற்று வருகிறது. அனைவரும் தேர்ச்சி பெற்று வருவதால் புதிய கல்வி கொள்கை குறித்து கவலைப்பட தேவையில்லை.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.