Thursday, September 26, 2019

பள்ளிகளில் கலாச்சார வகுப்புகள்... அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


சென்னை: பள்ளிகளில் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போதிக்கும் வகையில் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார். தமிழக அரசின் அனைத்து துறைகளும் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்வதாகவும், தமிழக வளர்ச்சிப்பணிகளில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.



பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரை சிறப்பாக செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், வரும் நாட்களில் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்களை கொண்டு பள்ளிகளில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பம் மூலம் நவீன சாதனங்களின் உதவியை கொண்டு, மாணவர்களுக்கு புரியும் எளிய முறையில் பாடம் கற்பிக்கும் திட்டம் விரைவில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அமல்படுத்தப்படும் எனகூறியுள்ளார்.



இதனிடையே கர்நாடக பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அந்த மாநில முதலமைச்சர் இது குறித்து முறையாக கடிதம் எழுதினால் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.