குறள் ஆய்வுச் செம்மல், கலித்தொகைக் கவிஞர், யாப்பின் குழவி, முனைவர் க. அரிகிருஷ்ணன் என்பவர், விழுப்புரம் மாவட்டம், திண்டிவம் வட்டம், இரட்டணை கிராமத்தில் கணேசன்-பார்வதி இணையருக்கு ஒரே மகனாக பிறந்தவர். மயிலம் தமிழ் கல்லூரியில் இளங்கலை(B.Lit) பட்டமும், வேலூர் கல்வியல் கல்லூரியில் இளங்கலைக் கல்வியியல் (B.Ed) பட்டமும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை(M.A) மற்றும் வெண்பாவின் இனங்கள் என்னும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்(M.Phil) பட்டங்களும், மீண்டும் மயிலம் தமிழ், அறிவியல் கல்லூரியில் “தமிழ்ப் பாவினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் தலைப்பில் முனைவர் பட்டமும்(Phd) பெற்றுள்ளார். 2012ஆம் ஆண்டு பாரதி தமிழ்ச் சங்கமும்(கொல்கத்தா), தமிழ்த்தாய் அறக்கட்டளையும் (தஞ்சாவூர்) இணைந்து நடத்திய திருக்குறள் தேசியக் கருத்தரங்கில் இவருக்கு “குறள் ஆய்வுச் செம்மல்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. மேலும் குயிலோசை, ரோஜாத்தோட்டம் புத்தக வெளியீட்டு விழாவில் குயிலோசை இணை ஆசிரியரான இவருக்கு நா.காமராஜ் என்பவர் “கலித்தொகைக் கவிஞர்” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார். மேலும் 2010இல் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் “சீவகசிந்தாமணியில் பாவின ஆட்சி” என்ற தலைப்பில் தம் கட்டுரையைச் சமர்ப்பித்தார். அம்மாநாட்டில் இவருக்கு இலங்கையைச் சார்ந்த நடராசன் என்பவர் யாப்பிலக்கணக் கட்டுரை சமர்ப்பித்தவர்களில் இவர் வயதில் இளமையானவராக இருந்தமையால் இவருக்கு “யாப்பின் குழந்தை” அதாவது “யாப்பின் குழவி” என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். தற்போது இவர் இரட்டணை அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். – அ. ராணிமுத்து



No comments:
Post a Comment