Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 4, 2019

பணிநிரந்தரம் ஊதிய உயர்வு சலுகைகள் கேட்கும்12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்.

அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள்,மே மாதம் சம்பளம், ஆண்டுதோறும் ஊதிய உயர்வு, போனஸ், மகப்பேறு விடுப்பு, பணிமாறுதல் என்று எந்த சலுகையும் இல்லாமலும், பணிநிரந்தரமில்லாமலும் பணியாற்றி வருகின்றனர்.
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல்திறன்கல்வி உள்ளிட்ட கல்விஇணைச்செயல்பாடு பாடப்பிரிவுகளுக்கு ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வாரத்திற்கு 3 அரைநாட்கள் வீதம் மாதத்திற்கு 12 அரைநாட்கள் பணி செய்தால் போதுமானது.

இவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு ரூ.2 ஆயிரமும், இரண்டாவது முறையாக 2017ம் ஆண்டு ரூ.700ம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதன்படி தற்போது ரூ.7 ஆயிரத்து 700 தொகுப்பூதியமாக பெற்று வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக ஊதிய உயர்வு தரப்பட்டு 2 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இதோடு 7வது ஊதியக்குழு அரசாணையிட்டும் பகுதிநேர தொகுப்பூதியத்தில் திட்ட வேலையில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு 30 சதவீத புதிய சம்பள உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வழங்கப்படுவதைப்போல பண்டிகை போனஸ், பணியின்போது இறந்தவர்களுக்கு இழப்பீடு, பணிஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் போன்ற சலுகைகள் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கிடையாது.

பகுதிநேர பெண் ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு காலவிடுப்புகூட கிடையாது. இவர்கள் பணிநியமனம் செய்யப்படுவதற்கு முன்பாக 2011ம் ஆண்டு ஆகஸ்டு 26ந்தேதி சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுபடி பகுதிநேர ஆசிரியர்களுக்கு அனைத்து மாதங்களுக்கும் சம்பளம் வழங்கவேண்டும். ஆனால் ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் கடந்த 8 ஆண்டுகளில் மே மாத (விடுமுறை காலம்) சம்பளமாக ஒவ்வொருவரும் ரூ.53 ஆயிரம் இழந்துள்ளனர்.பணிநியமன அரசாணை 177ல் காலிப்பணியிடங்களில் ஒரு பகுதிநேர ஆசிரியர் கூடுதலாக அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணிபுரிந்து அதற்குரிய சம்பளத்தை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என ஆணையிடப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த அரசாணை செயல்படுத்தப்படவே இல்லை. இதே போன்று அடுத்து வெளியிடப்பட்ட அரசாணை 186லும் காலிப்பணியிடங்களில் ஒரு பகுதிநேர ஆசிரியர் கூடுதலாக அதிகபட்சமாக 2 பள்ளிகளில் பணிபுரிந்து அதற்குரிய சம்பளத்தை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அதுவும் செயல்படுத்தப்படவில்லை. அரசின் இந்த உத்தரவுகளையெல்லாம் செயல்படுத்தியிருந்தால்கூட பகுதிநேர ஆசிரியர்கள் அதிக சம்பளத்தை பெற்றதோடு கிட்டதட்ட முழுநேர பணி செய்திருப்பார்கள். ஆனால் தற்போது ஒரு பள்ளியில் பகுதிநேரமாக பணியாற்றினாலும் அனைத்து வகையிலும் முழுநேரமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் பணிகளை கூறுவதால் அவற்றை மறுக்காமல் முழுநேரமும் பணியாற்றி வருகின்றனர். மேலும் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் பள்ளிகளை இழுத்துமூடி போராட்டம் நடத்தியபோது பகுதிநேர ஆசிரியர்களை முழுநேரமாக பள்ளிகளை இயக்க அரசு உத்தரவிட்டு வருகிறது.

இதற்கு தனியாக ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை. தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக கடந்த 8 ஆண்டுகளில் கவர்னர், 3 முதல்வர்களையும், 8 கல்வி அமைச்சர்களையும் சந்தித்து மனு அளித்தும் இதுவரை முன்னேற்றம் இல்லாமல் எதிர்கால வாழ்க்கை குறித்து கவலையில் தவித்து வருகின்றனர் பகுதிநேர ஆசிரியர்கள். இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில் அரசுக்கு கருணை மனு அனுப்பி வருகிறோம்.கருணை மனுவை பரிசிலிக்க வேண்டுகிறோம். பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை நாங்கள் கேட்கும்போது மத்திய அரசு போதுமான நிதி தருவதில்லை என கல்வி அமைச்சர் சொல்வது வேதனை தருகிறது. எப்படியாவது முயற்சி செய்து முடிந்ததை உங்களுக்கு செய்கிறேன் என சொல்லாமல் எங்கள் கோரிக்கையை புறந்தள்ளுவது மனிதநேயமில்லை. நாங்கள் கடந்த 2012ல் பணியமர்த்தப்படும்போது 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் இருந்தோம். இதில் உயிரிழப்பு, பணிஓய்வு, பணிராஜிநாமாவால் தற்போது காலிப்பணியிட எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சம்பள உயர்வுக்கு இந்த நிதியை வழங்கலாம் அல்லது கூடுதலாக பள்ளிகளை அனைவருக்கும் வழங்கலாம். எனவே அரசு இதனை கருத்தில் கொள்ளவேண்டும். 8 கல்விஆண்டுகள் முடிவடைந்தும் இதுவரை ஆண்டுதோறும் ஊதியஉயர்வுகூட சரிவர வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது. படிப்படியாக பணிநிரந்தரம் செய்திருந்தால்கூட இந்த 9 கல்விஆண்டில் கிட்டதட்ட அனைவருமே பணிநிரந்தரம் செய்யப்பட்டிருப்பார்கள். தமிழக அரசே இந்த திட்டவேலையில் இவ்வளவுபேரை ஒப்பந்த தொகுப்பூதிய பகுதிநேரவேலையில் அமர்த்தியது. எனவே அரசின் கொள்கை முடிவை எங்களின் வாழ்வாதாரம் கருதி மனிதநேயத்துடன் பணிநிரந்தர அறிவிப்பை விரைவாக அறிவிக்க வேண்டும் என்றார்.

மேலும் 2017ல் நடைபெற்ற சட்டப்பேரவைத்தொடரில் கல்விமானியக் கோரிக்கையின்போது திமுக உறுப்பினர்கள் புவனகிரி சரவணன், திருக்கோவிலூர் தொகுதி முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோரின் கேள்விக்கு பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது, பணிநிரந்தரம் செய்ய 3 மாதத்தில் கமிட்டி அமைக்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அமைச்சர் கூறியபடி உடனடியாக பணிநிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.