JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, October 15, 2019

ரூ.2,000 நோட்டுகள் நிறுத்தம் - RBI அறிவிப்பு!


ரூ.2000 நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.கடந்த 2016ம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவும் உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதனையடுத்து ரூ.2000 நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிட்டது. அண்மைக் காலமாக ரூ.2000 நோட்டுக்கள் ஏடிஎம்களில் சரிவர கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மீண்டும் பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட உள்ளதாகவும், மக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை உடனடியாக வங்கிகளில் மாற்றிக் கொள்ளும்படியும் இணையதளங்களில் பலவிதமாக செய்திகள் பரவியது.



ஆனால் அப்படி எந்த எண்ணமும் இல்லை எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இதுவரை அச்சிடப்பட்டு, புழக்கத்தில் விடப்பட்ட ரூ.2000 நோட்டுக்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, உயர் மதிப்புக் கொண்ட பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர் கடந்த 2016 - 17 மற்றும் 2017 -18ம் நிதியாண்டுகளில் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடப்பட்டது. 2016-17 ம் நிதியாண்டில் ரூ.354 கோடி அளவிலும், 2017-18 ம் நிதியாண்டில் ரூ.116 கோடி அளவிலும் அச்சிடப்பட்டது. ஆனால் 2019 - 2020ம் நிதியாண்டில் ஒரு நோட்டு கூட அச்சிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவிப்பதற்காகவும், ஊழல் தடுப்பதற்காகவும் ரூ.2000 நோட்டுக்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தனது பதிலில் தெரிவித்துள்ளது.