Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, November 5, 2019

நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறக் கூடாது? சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி கேள்வி.!


சுமார் 5 லட்சம் ரூபாய் வரையில் பணம் செலுத்தி பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களே நீட் தேர்வு மூலம் அதிக மருத்துவ இடங்களை பிடித்துள்ளனர். இது பணம் செலுத்தி படிக்க முடியாத ஏழை மாணவர்களை வேறுபடுத்தும் செயல் என நீட் தேர்வு குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.



சமீபத்தில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீட் தேர்வு குறித்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீட் தேர்வு மூலமாக தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பிற்கு சேர்ந்த மாணவர்களில், தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்களே அதிகம் எனவும், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களில், அரசு பயிற்சி மையங்களில் பயின்றவர்களும், அரசு பள்ளியில் படித்த மாணவர்களும் குறைவுதான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



இதனைத் தொடர்ந்து, முந்தைய காங்கிரஸ் மற்றும் திமுக அரசு கொண்டு வந்த நீட் தேர்வை ஏன் தற்போது ஆளுகின்ற அரசு திரும்பப்பெறக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், நீட் தேர்வு கொண்டு வந்த பிறகு பயிற்சி மையங்கள் மூலம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுமார் 5 லட்சம் ரூபாய் வரையில் பணம் செலுத்தி பயிற்சி மையங்களில் படித்த மாணவர்களே அதிக மருத்துவ இடங்களை பிடித்துள்ளன என்பதை அறிவதில் வேதனையாக உள்ளது. இது பணம் செலுத்தி படிக்க முடியாத ஏழை மாணவர்களை வேறுபடுத்தும் செயலாகும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மருத்துவக் கல்லூரி கதவுகள் ஏழை மாணவர்களுக்கு திறக்காது என்பதே உண்மை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.