புதுதில்லி: பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் திருத்தங்களுக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
2020-21 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாளாகும்.
இந்நிலையில், நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் திருத்தங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று புதியதாக தாக்கல் செய்துள்ள மனுவில், 2017 -2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட, நீட் தேர்வைத் கட்டாயமாக்கும் மத்திய அரசின் திருத்தங்களை ரத்து செய்யக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விடுமுறைக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை மீண்டும் தொடங்க உள்ளது. அன்று, இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனத் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட உள்ளது.