Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 27, 2020

குழந்தைகளை புரிந்து கொள்வோம்!


அறிவும் ஆற்றலும் மிக்க குழந்தைகளைப் பெற்றெடுத்து பேணி வளர்ப்பது வாழ்வின் பேறு. இன்று அதி வேகத்தில் பயணிக்கும் வாழ்க்கை சூழலில், முன்னோர்களைப் போல், நின்று நிதானித்து குழந்தைகளை வளர்க்கும் வாய்ப்புகள் குறைவாக உள்ளன. வேலைக்கு செல்லும் பெற்றோர் அதிகரித்துள்ள சூழலில், குழந்தைகளுடன் அலைபேசி மூலமாக உரையாடுதல் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உதவியுடன் சைல்டு லைன் சார்பாக வெளியிடப்பட்ட கணக்கெடுப்பை கவனத்தில் கொண்டு, குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.



இக்கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் குழந்தை பாலியல் துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கை 985 ஆகும். இந்தக் கணக்கெடுப்பின்படி, கேரளாவை (1742) அடுத்து, தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் பதிவாகியுள்ள 7684 குழந்தை பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில், 35% குழந்தைகள் அண்டை அயலார்களால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அந்நியர்களால் 25%, ஆசிரியர்களால் 7%, உறவினர்களால் 8%, நண்பர்களால் 9% என இந்தக் கணக்கெடுப்பு கூறுகின்றது. குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு சார்பாக தொடர்ந்து ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு, அரசின் நடவடிக்கைகள், போக்சோ போன்ற சட்டங்கள் காரணமாகவே, அச்சப்படாமல் இத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன. இன்னும் பதிவாகாத குற்றங்களும் இருக்கலாம்.எதிர்பார்ப்புகள் குழந்தையின் மனநிலைக்கும், சுதந்திரமாக செயல்படும் முதிர்பருவத்திற்கும் இடைப்பட்ட இளம்பருவநிலையில் (10-18வயது) குழந்தைகளை சரியாக வளர்க்க வேண்டும்.




பருவ வயதின் ஆரம்பத்தில், அதாவது 10 - -14 வயது குழந்தைகளை கையாளுவது, பல பெற்றோர்களுக்கு கடினமான காரியமாக உள்ளது. ஏனென்றால், பல நேரங்களில் அவர்கள் தங்கள் பெற்றோர்கள் எதிர்பார்க்காத செயல்களில் ஈடுபடுவதால், பெற்றோர் கண்டிப்பான ஒழுக்க முறைகள் மூலமும், கட்டுப்பாடுகள் மூலமும் இளம் பருவத்தினர் மீது எதிர்பார்ப்புகளை காண்பிக்கின்றனர். குறிப்பாக பெண்குழந்தைகள் மீது காண்பிக்கின்றனர். ஒரு பெற்றோராக, கண்டிப்பாக இளம் பருவத்தினரின் நடத்தை மற்றும் மனரீதியான வளர்ச்சியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த பருவத்தில் நன்னடத்தை இல்லாத மன நிலை, மாறுபட்ட மனவளர்ச்சி குறைபாடு, அதிவிரைவு செயல்திறன் காரணமாக இளம் பருவக் குழந்தைகளுக்கு ஆளுமை கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த ஆளுமை கோளாறினால், மன அழுத்தம், மனப்பதட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது நாளடைவில் மன அழுத்த நோயாக மாறவும் வாய்ப்புகள் அதிகம். பெற்றோர்கள், சக நண்பர்கள், ஆசிரியர்கள் மூலமாக இந்த குறைபாடுகளை அறிய முடியும்; அறிய வேண்டும். இல்லையெனில், குழந்தைகள் தற்கொலை முயற்சியில் கூட ஈடுபடலாம்.தற்கொலை முயற்சிஇப்படித்தான் மனம் வெறுத்து போன ஒர் இளம் பருவ ஆண் குழந்தை குன்றின் மேல் ஏறி தற்கொலை செய்ய முயன்றான்.




அதைப் பார்த்த பெரியவர், " தம்பி! நீ தாரளமாக சாகலாம். அதற்கு முன் எனக்காக காரியம் செய்வீர்களா?" எனக் கேட்டார். அவனும் சரி எனத் தலையாட்டினான்.

"தம்பி! அதோ கீழே தெரிகிறதே ஓர் அடர்ந்த காடு. அதை ஒரு முறை எனக்காகக் சுற்றிவிட்டு வருவாயா? எப்போது திரும்பி வருவாய்?" எனக் கேட்டார்.

"அது பெரியக் காடு போல் தெரிகிறது. சுற்றி வர மூன்று நாட்கள் ஆகும்.," எனச் சென்றான். ஆனால், அவன் அதே நாளில் திரும்பி வந்தான். "என்ன தம்பி, இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டாய்?" என்று பெரியவர் கேட்டார்.

"ஐயா! அது ஒன்றும் பெரிய காடு இல்லை; இங்கிருந்து பார்க்கத்தான் அப்படித் தெரிகிறது. சுமார் நூறு மரங்கள் தான் அங்கிருக்கும்." என்றான். அவர் சிரித்தப்படி, "அதே போல்தான் தம்பி, உன் பிரச்னையும் பார்க்கப் பெரியதாகத் தோன்றும்.

அருகே சென்று பார்த்தால் சிறிதாகிவிடும்.இதை நீ புரிந்து கொண்டால் சரி. இப்போது நீ சாகலாம்" என்றார். அவன் சாவை கைவிட்டான். வாழ்வை கைப்பற்றினான்.




நாம் குழந்தைகள் வாழ்வை கைப்பற்றக் கற்றுத்தர வேண்டும். அதற்கு, குழந்தைகளின் பிரச்னைகள் குறித்து அறிந்து கொண்டு, அதற்கேற்ற நல்ல முடிவை எடுக்க வேண்டும்.தனிமை, சோர்வு, விரக்தி, படிப்பில் ஈடுபாடு இல்லாமை, எடை குறைதல், பொழுது போக்குகளில் விருப்பம் இல்லாமை, பசியின்மை, துாக்கமின்மை, தேவையற்ற அச்சம், தற்கொலைக்கு முயற்சித்தல் போன்றவை குழந்தைகள் ஆளுமை கோளாறு நோய்க்கு ஆளாகி இருப்பதை உணர்த்துபவை. ஆகவே, இக்குழந்தைகளுக்கு நம்பிக்கை அளித்தல், பிரச்னைகளைத் தீர்க்கும் திறனை அதிகரிக்க செய்தல், சமுதாயத்துடன் ஒன்றிப் போகுதல் போன்ற சிந்திக்க துாண்டும் சிகிச்சை அளித்தல் அவசியம். குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்ப்பது முக்கியம்.




"ஒருவனுக்கு ஒருத்தி" என்ற தமிழர் பண்பாட்டை உணர்த்தி வளர்க்க வேண்டும். அதுவே, இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க வழி செய்யும்.ஒழுக்கமாக வாழதொழில்நுட்பம் குழந்தைகளை கவர்ந்துள்ள உலகில் குழந்தைகளைத் தவறு செய்யாமல் வளர்ப்பது எப்படி? குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுதல், குழந்தைகளிடம் நெருக்கத்தை உருவாக்குதல், சுதந்திரமாக செயல்பட உதவுதல், தனித்துவத்தை ஏற்றுக் கொள்ளுதல், சுயமதிப்பை வளர்த்தல், நமதுகுறைகளை ஒத்துக் கொள்ளுதல் போன்ற நடவடிக்கை மூலம் குழந்தைகளை ஒழுக்கமாக வாழ வைக்க முடியும்.பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதுடன் நின்று விடக்கூடாது. பள்ளியில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களில் பங்கு கொள்ள வேண்டும்.




அதனால், பள்ளியின் புதிய செயல்பாடுகள், அவர்களுடைய குழந்தைகளின் விருப்பங்கள், சக நண்பர்களின் பழகுமுறை, பள்ளியில் குழந்தைகளின் செயல்பாடுகளைப் பற்றி அறிய முடியும். ஆசிரியர்களும் குழந்தைகளின் வளர்ச்சியில் ஆர்வம் காட்ட முடியும். பெற்றோர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 15 நிமிடம், குழந்தைகளின் பள்ளி செயல்பாடுகளைப் பற்றி அறிய அல்லது கலந்து ஆலோசிக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளின் படிப்பு, வீட்டுப்பாடங்களை செய்ய உதவி செய்ய வேண்டும்.

"உன்னால் முடியும்" என்று அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களின் அடிப்படை திறன்களை வளர்க்க வேண்டும். வீட்டு வேலைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகளின் திறமைகளை மிகைப்படுத்தாமல் பாராட்டவேண்டும்.

ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண வேண்டும். அப்போது, குடும்ப விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். நிபந்தனையற்ற அன்புபெற்றோர்கள் எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் குழந்தைகளின் மீது நிபந்தனையற்ற அன்பு காண்பிக்க வேண்டும். குழந்தைகளை ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.




குழந்தைகள் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். பெற்றோர்கள் அவர்களின் உணர்வுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளுதல், குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடுதல், குழந்தைகளை அரவணைத்துக் கொள்ளுதல், தட்டிக் கொடுத்தல், கைகளைப் பிடித்துக் கொள்ளுதல் என்பது போன்ற விஷயங்கள் இளம் பருவக் குழந்தை வளர்த்தெடுப்பில் முக்கிய அம்சங்கள் ஆகும்.வீட்டில் பொறுப்புகளை அவர்களின் தரத்திற்கு ஏற்றவாறு தருதல். அவர்களாகவே தனித்து செயல்பட முடியும் போது தேவையற்ற குறுக்கீடுகளைத் தவிர்த்தல். இளம் பருவத்தினரின் வார்த்தைகளுக்கு கருத்துகளுக்கும் மதிப்பு கொடுத்தல், குடும்பக் கலந்துரையாடலில் அவர்களையும் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.




இளம் பருவத்தினரால் எதார்த்தமாக செய்யக்கூடிய காரியங்களைக் குறித்து எதிர்பார்ப்பு வேண்டும்.சுயவிழிப்புணர்வுதிறமையான குழந்தை பராமரிப்பு என்பது ஒருவர் மெதுவாக தங்களது கடமைகள், குடும்ப மதிப்பு, கலாச்சாரம் ஆகியவற்றை மேம்படுத்தப்பட்ட நிலையில் பெற்றோரிடம் இருந்து இளம் பருவத்தினருக்கு கடத்துவதும், சுய விழிப்புணர்வு பெறச் செய்வதுமாகும். இதனைச் செயல்படுத்துவதன் மூலம் இளம் பருவத்தினர் தங்களது தனிப்பட்ட பிரச்னைகளைப் பெற்றோருக்கு எந்தவித சலனமும் இன்றி சொல்வார்கள். இதனால், தொழில்நுட்பங்கள் மற்றும் நண்பர்களின் தவறான பிடியில் இருந்து குழந்தைகளை மீட்கலாம். தலைமுறை தலை முறையாக நற்பண்புகளை வளர்த்தெடுத்து, கடத்த, குழந்தைகளுடன் உரையாடுவோம். குழந்தைகளைப் புரிந்து கொள்வோம்.-- க.சரவணன்தலைமை ஆசிரியர் டாக்டர் டி. திருஞானம் துவக்கப்பள்ளி, மதுரை.93441 24572