Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, January 8, 2020

SSC தேர்வு: முயல்வோம்... வெல்வோம்!


பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) ஒருங்கிணைந்த +2 நிலையில் நடைபெறவுள்ள தேர்வு (Combined Higher Secondary Level Exam) மிக எளிதான தேர்வுகளில் ஒன்றாகும்.
இத்தேர்வு குறித்தும், அதை எதிர்கொள்வது குறித்தும், ஓய்வு பெற்ற பாராளுமன்ற தொலைத்தொடர்பு செயலர்(ஐஏஎஸ் அதிகாரி) என்.எம்.பெருமாள் நம்மிடம் கூறியது:
"இத்தேர்வு தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குரூப்4/வி.ஏ.ஓ தேர்வுக்கு இணையான தேர்வு ஆகும். அடிப்படைத் தகுதி +2 தேர்ச்சி மட்டுமே. கணினி தரவு உள்ளீட்டாளர்கள் (Data Entry Operator) -பதவிக்கு +2 -இல் பிரிவில் கணிதமும் எடுத்திருக்க வேண்டும். இத்தகுதியை 01.01.2020 -க்குள் பெற்றிருக்க வேண்டும். 01.01.2020 -க்குள் 18 வயது நிரம்பி இருப்பவர்கள் இத்தேர்வை எழுதலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 18 வயது முதல் 27 வயது வரை. பின்தங்கிய வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்ட பழங்குடிமக்களுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. விதவைகள், விவாகரத்து ஆனவர்கள், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர்களுக்கு மத்திய அரசு ஆணைப்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. விவாகரத்து பெற்றவர்கள், விதவைகளுக்கு 40 வயது வரை வயது வரம்பில் தளர்வு உண்டு. இத்தேர்வைப் பற்றிய எல்லா முழு விவரங்களையும் www.ssc.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்.
இத்தேர்வு மூலமாக இளநிலை எழுத்தர், அஞ்சல் துறை உதவியாளர்கள், அஞ்சல் பிரிப்பு உதவியாளர்கள், கணினி தரவு உள்ளீட்டாளர்கள் (Data Entry Operator) போன்ற பதவிகளுக்கு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இப்பதவிகள் மத்திய அரசு ஊதிய நிலை 2-இலும் 4-இலும் உள்ளன. ஆரம்ப ஊதியம் ரூ.30,000-இலிருந்து ரூ.45,000 வரை கிடைக்கும். முந்தைய ஆண்டுகளில் இருந்த காலியிடங்களின் அடிப்படையில் இந்த ஆண்டும் கிட்டத்தட்ட 5000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்புள்ளன.
கணினி மூலமாக தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.100 மட்டுமே. பெண்கள், தாழ்த்தப்பட்ட பழங்குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர் ஆகிய பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
முதல் நிலை எழுத்துத் தேர்வு இருநூறு மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. கணினி மூலம் ஒரு மணி நேரம் நடக்கும் இத்தேர்வில் நான்கு பிரிவுகள் உள்ளன. பொது அறிவு, புத்திக்கூர்மை, கணிதம், பொது ஆங்கிலம்- இந்நான்கிற்கும் தலா 50 மதிப்பெண்கள் உண்டு. ஒவ்வொரு பகுதியிலும் 25 கேள்விகள் கேட்கப்படும். தவறான விடை ஒவ்வொன்றுக்கும் 0.5 மதிப்பெண் குறைக்கப்படும்.
முதல்நிலைத் தேர்வில் குறிப்பிட்ட கட்ஆப் மதிப்பெண்களைப் பெற்றவர்கள் இரண்டாம் நிலைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 100 மதிப்பெண்களைக் கொண்டுள்ள இத்தேர்வில் ஆங்கிலத்தில் கடிதம், சுருக்கி வரைதல் (Precis), சிறிய கட்டுரை போன்றவை இருக்கும். இத்தேர்வின் காலம் ஒரு மணி நேரம் ஆகும். இத்தேர்வில் குறைந்தது 33% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இத்தாளில் எடுக்கப்படும் மதிப்பெண்களும் முதல் நிலைத் தேர்வு மதிப்பெண்களுடன் சேர்க்கப்படும். அடுக்கு I (Tier I), அடுக்கு II (Tier II) இரண்டுக்கும் சேர்ந்து மொத்த மதிப்பெண்கள் 300. இதில் ஆங்கிலத்துக்கு மட்டுமே 150 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே ஆங்கிலப் புலமை வாய்ந்தவர்களும் ஆங்கில இலக்கிய மாணவர்களும், இத்தேர்வில் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. இளங்கலை, முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவர்களை இத்தேர்வு எழுத தமிழகத்திலுள்ள எல்லா கல்லூரிகளும் ஊக்குவித்தால் மாணவர்கள் அரசு வேலைகள் மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் மிளிர வாய்ப்புகள் உண்டு.
இரண்டு நிலைகளிலும் வெற்றி பெறுபவர்கள் மூன்றாம் நிலையாக ஆங்கிலம் அல்லது இந்தி தட்டச்சு தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். கணினி மூலமாக நடக்கும் இத்தட்டச்சு தேர்வில் ஒரு நிமிடத்திற்கு 35 ஆங்கிலச் சொற்கள் அடிக்க வேண்டும். தமிழக அரசின் தட்டச்சு தேர்வின் சான்றிதழ் தேவையில்லை. கணினி தரவு உள்ளீட்டாளர்கள் (DEO), ஒரு மணிநேரத்துக்கு 8000 தட்டச்சு (Key Depressions) செய்ய வேண்டும். தட்டச்சு தேர்வு 15 நிமிடங்களுக்கு நடக்கும். 2000 முதல் 2200 வரையிலான தட்டச்சுத் திறன் (Key Depressions) கொண்ட பகுதிகள் கொடுக்கப்படும்.
விரிவான பாடத்திட்டத்தை ssc.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கவும். சுருக்கமாகக் கூறினால் பொது அறிவில் வரலாறு, புவியியல், இந்திய சுதந்திரப் போராட்டம், பொருளாதாரம், அரசியலமைப்புச் சட்டம், அறிவியல், விளையாட்டு, நடப்பு நிகழ்வுகள் போன்றவற்றில் கேள்விகள் அமைந்திருக்கும். 9,10 - ஆம் வகுப்புகளுக்கான வரலாறு, புவியியல், பொருளாதாரம், அறிவியல் மற்றும் 11,12- ஆம் வகுப்புகளுக்கான வரலாறு, அரசியல், பொருளாதாரம் போன்றவற்றை நன்கு படிக்க வேண்டும். 11, 12- ஆம் வகுப்புகளுக்கான அறிவியலை மேலோட்டமாகப் பார்த்தல் நலம். பொதுஅறிவுக்கான ரூ.100 முதல் ரூ.150 வரை உள்ள கையடக்க நூல்களை அநேக பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. நடப்பு நிகழ்வுகளுக்காக சுரா, GK Times, சங்கர் அகாடெமியின் "தேர்வுப் பெட்டகம்" போன்றவை தமிழில் உள்ளன. ஆங்கிலத்தில் Pratiyogita Kiran, News and Events, Competition Refresher, Competition in Focus, Renu General
Knowledge போன்ற நூல்கள் வெளி வருகின்றன. தமிழக அரசின் அநேக பொது நூலகங்களில் இம்மாதிரியான நூல்கள் கிடைக்கின்றன. Competition Success Review -உடன் தொடர்புள்ள General Knowledge Today என்ற மாதாந்திர இதழில் மத்திய அரசில் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளின் முந்தைய கேள்வித்தாள்கள் கொடுக்கப்படுகின்றன. இவற்றை மாறி மாறிப் படிக்கும்போது, கேள்விகளின் தரமும் நமக்கு புலப்படும். பல்வேறு பாடப் பகுதிகளில் புலமையும் ஏற்படும்.




கணிதத்தைப் பொறுத்தவரையில் 8,9,10- ஆம் வகுப்பு நூல்களும் R.S.
Agarwal, Dr.U.Mohan Rao-Cu
Quantitative Aptitude for Competitive Examinations (Scitech Publications சென்னை) போன்ற நூல்களும் மிக்க உறுதுணையாக இருக்கும். முந்தைய பாராக்களில் குறிப்பிட்டுள்ள பதிப்பகங்களும் கணித நூல்களை வெளியிட்டுள்ளன. புத்திக் கூர்மைக் (General Intelligence) கென்றே அநேக நூல்கள் கடைகளில் கிடைக்கும்.
ஆங்கிலத்திற்கும் General English for Competitive Exam என்ற நூல்கள் அநேக பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன. மறை பொருட் சொற்றொடர்கள் (Idioms and Phrases), நேர்பொருள் (Synonyms), எதிர்மறை பொருள் (Antonyms) ஆங்கிலத்தில் பொதுவான தவறுகள் (Common Errors in English) நேர்கூற்று அயற்கூற்று சொற்றொடர்கள், செய்வினை செயல்பாட்டு வினை, கேள்வி இணைப்பு (Question tag) போன்றவற்றிலிருந்து கேள்விகள் வரும். 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள ஆங்கிலப் பாடங்களின் தரத்திலிருந்தே இக்கேள்விகள் பெரும்பாலும் அமையும்.




தமிழக இளைஞர்கள் இத்தேர்வில் சற்றுக் கடினமாக உழைத்து வெற்றி பெற்றால் அவர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமைய நல்ல வாய்ப்புகள் உள்ளன. வெளி மாநிலங்களில் வேலை பார்த்தால் சிறிது நாட்களிலேயே தமிழக இளைஞர்களின் ஆங்கிலம் மேலும் மிகவும் சிறப்படையும்.
வெளி மாநிலங்களில் வேலை கிடைக்கும் பொழுது, இந்தியில் ஆழ்ந்த புலமை இல்லாத காரணத்தினால் தமிழக இளைஞர்கள் எழுத பேச ஆங்கிலத்தைப் பயன்படுத்தக்கூடிய நிலை ஏற்படும். இந்தச் சூழ்நிலை காரணமாக ஆங்கிலத்தில் தமிழக இளைஞர்களுக்கு வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்படும். மிக இளவயதில் குறிப்பாக 23 வயதுக்குள் இத்தேர்வில் வெற்றி பெற்றால், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு பல்வேறு உயர்நிலை வேலைகளைக் கண்டிப்பாகப் பெற நிறைந்த அளவில் வாய்ப்புகள் உள்ளன.




+2 தேர்வு பெற்று பதினெட்டு வயது நிரம்பிய தமிழக கல்லூரி மாணவர்கள் அரசு வேலை வேண்டுமென்றால் இத்தேர்வை எழுதுவது நன்மை பயக்கும். அதுவும் ஆங்கில இலக்கியம், கணிதம் போன்ற பாடங்களை முக்கிய பாடங்களாக எடுத்து இளநிலை முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம்'' என்றார் என்.எம்.பெருமாள்.
Last date for receipt of application: 10-01-2020 (23:59)
Last date for making online fee payment: 12-01-2020 (23:59)
Last date for generation of offline Challan: 12-01-2020 (23:59)
Last date for payment through Challan




(during working hours of Bank): 14-01-2020
Date of Computer Based Examination (Tier-I):
16-03-2020 to 27-03-2020
Date of Tier-II Examination (Descriptive Paper): 28-06-2020 - வி.குமாரமுருகன்