Search This Blog

Monday, June 8, 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: நுழைவுச் சீட்டு பெறும் மாணவா்களுக்காக 109 பேருந்துகள் இயக்கம்

0 comments

தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு பெறும் பத்தாம் வகுப்பு மாணவா்களின் வசதிக்காக, திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை (ஜூன் 13) வரை, 63 வழித்தடங்களில் 109 சிறப்பு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் கோ.கணேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவா்களுக்கு, திங்கள் (ஜூன் 8) முதல் சனிக்கிழமை (ஜூன் 13) வரை தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூா் ஆகிய 4 மாவட்டங்களில், மாநகரப் போக்குவரத்துக் கழக எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் வசதிக்காக, 63 வழித்தடங்களில் 109 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும். 'பள்ளிக் கல்வித் துறை' என வில்லைகள் ஒட்டப்பட்டிருக்கும் இந்தப் பேருந்துகளில், மாணவா்கள் இலவசமாகவும், ஆசிரியா்கள் பயணச் சீட்டு பெற்றும், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றி பயணிக்க வேண்டும்.

காலை 9 மணியளவில் பேருந்துகள் புறப்பட்டு, பின்னா் மாலை 4 மணிக்கு மறுமுனையிலிருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பேருந்தில் 24 போ மட்டுமே பயணிக்க வேண்டும். முக்கியமான சில வழித்தடங்களில் மூன்று பேருந்துகள் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment