Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 17, 2020

பிளஸ்1 வகுப்புக்கு புதிய பாடத் தொகுப்பு: தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் அறிமுகம்


சென்னை: தமிழகத்தில் மேனிலைக் கல்வியில் தற்போது நடைமுறையில் உள்ள பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து, மேம்படுத்தப்பட்ட பாடத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தி பள்ளிக் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள உத்தரவு: தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மொழிப்பாடம், ஆங்கிலம் மற்றும் நான்கு முதன்மை் பாடங்கள் என கல்வி பயிற்றுவிக்கப்பட்டு மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு மாணவர்கள்தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில் மாநில பொதுப் பள்ளி வாரியத்தின் நிர்வாக குழுக் கூட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கூடியது.

அதன் தொடர்ச்சியாக தற்போது நடைமுறையில் உள்ள பாடத் தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி , மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு ஏற்றதாகவும் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், பாடப்பிரிவுகளை ஏற்படுத்தி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள 4 முதன்மைப் பாடத் தொகுப்புகளுடன் புதியதாக 3 முதன்மை பாடத் தொகுப்புகளை பிளஸ் 1 வகுப்புக்கு 2020-2021ம் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்நாடு பொதுக்கல்வி வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதை ஏற்று அரசுத் தேர்வுகள் இயக்குநரும் அதன்படி புதிய பாடத் தொகுப்பை அறிமுகம் செய்ய அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதினார். மாநில பொதுக்கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அறிக்கை, அரசுத் தேர்வுகள் இயக்குநர் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள பாடத் தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி நடைமுறையில் உள்ள 4 பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து புதியதாக 3 பாடத் தொகுப்புகளை அறிமுகம் செய்து நடைமுறைப் படுத்த அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது. இதன்படி,

* பகுதி 1- மொழிப்பாடம், பகுதி 2-ஆங்கிலம் தவிர, பகுதி 3ல் புதிய வழிமுறைகளுடன் கூடிய 3 முதன்மை பாடத் தொகுப்பு(500 மதிப்பெண்கள்) அல்லது தற்போது நடைமுறையில் உள்ள 4 முதன்மை பாடத் தொகுப்பையோ(600 மதிப்பெண்கள்) தெரிவு செய்து கொள்ளலாம்.
* மாணவர்கள் தெரிவு செய்யும் பாடத் தொகுப்பில் உள்ள பகுதி 1 மொழிப்பாடம், பகுதி 2,ல் ஆங்கிலம், பகுதி3ல் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சிபெற வேண்டும்.
* புதிய மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்பு 2020-2021 கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
* பகுதி 1ல்: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, உருது, இந்தி, சமஸ்கிருதம், அரபிக், பிரஞ்ச், ஜெர்மன் இவற்றில் ஏதாவது
ஒரு பாடம்.
* 600 மதிப்பெண்களுக்கான பாடத் தொகுப்பு தற்போது நடைமுறையில் உள்ளபடி பாடங்களை தெரிவு செய்து கொள்ளலாம்.

பகுதி 3ல்: அறிவியல் பாடத் தொகுப்பில்
1. கணக்கு, இயற்பியல், வேதியியல்,
2. இயற்பியல், வேதியியல், உயிரியல்,
3. கணக்கு, இயற்பியல், கணினி அறிவியல்,
4. வேதியியல், உயிரியல், மனையியல்.

கலைப் பாடத் தொகுப்பில்:
1. வரலாறு, புவியியல், பொருளியல்.
2. பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல்,
3. வணிகவியல், வணிக கணிதம், புள்ளியியல், கணக்குப் பதிவியல்.
4. வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல்,
5. சிறப்புத் தமிழ்,வரலாறு,பொருளியல்

No comments:

Post a Comment