Breaking

Monday, June 1, 2020

பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் டாஸ்க்குகள்..!

ஆசிரியருக்கு நூறு முகங்கள் வேண்டும், வகுப்பறைக்கோ நூற்றுக்கணக்கான கண்கள் வேண்டும்” என்பார் கல்வியாளர் மாடசாமி. அந்த வரிகள் இனி வருங்கால வகுப்பறைக்கு மிகவும் பொருந்தக்கூடியதாய் உள்ளன.

கொரொனாவும் லாக்டெளனும் மற்றவர்களுக்கு எப்படியாயினும் மாணவர்களுக்கு களிப்பூட்டும் விதத்தில் அமைந்தது. ஆனால், அதிக விடுமுறையும் அவர்களுக்கு திகட்டிவிட்டது. தேர்வு இல்லை, வீட்டுப்பாடம் இல்லை என கட்டற்ற சுதந்திரத்தை அனுபவித்தாலும், அவர்களின் அறிவுத்திறனை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு இன்றைய ஆசிரியர்களுக்கு சவாலாக இருக்கும்.
தற்போது வீட்டுப்பாடம் செய்யும்போது, எண்களைக் கூறினால் எழுதுவதில்லை. எழுத்துக்களை மறந்துவிட்டார்கள். நினைவு மொத்தமும் அலைபேசி விளையாட்டும், சினிமா மோகமும் அவர்களைச் சூழந்துள்ளது பட்டவர்த்தனமாய் தெரிகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தவுடன் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு வருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். பள்ளி திறந்தவுடன் என்னென்ன முன்னேற்பாடுகள் இருக்கலாம்...

#பள்ளி திறந்தவுடன்...

சீனாவில் பள்ளிக்குச் செல்லும் குழந்தை, சானிடைஸரை கைக்கு மட்டும் தெளிக்காது அவர் கால்களுக்கும் தெளித்து சுத்தம் செய்து பள்ளிக்குள் அனுப்புவார்கள். அதுபோல், கிருமிநாசினி தெளித்து நாமும் பள்ளிக்குள் அனுப்பலாம். மேலும், காய்ச்சல் இருக்கிறதா என்பதை கருவி மூலம் பரிசோதித்த பின்பே பள்ளியினுள் நுழைய அனுமதிக்க வேண்டும். முகக்கவசமின்றி கட்டாயம் அனுமதிக்கக் கூடாது.

கல்வியாளர்கள் சொல்வதுபோல், காலை மாலை என வகுப்புகள் இருந்தால் குழந்தைகளை அழைத்து வருவதிலும் அழைத்துச் செல்வதிலும் இடர்பாடுகள் இருக்கும். எனவே திங்கள், புதன், வெள்ளி 1,3,5 வகுப்புகளும், செவ்வாய், வியாழன், சனி 2,4 மற்றும் 5-ம் வகுப்பினரை வரவைக்கலாம்.
பள்ளி அளவிலான இறைவணக்கத்தைத் தவிர்த்து, வகுப்பளவில் நடத்தலாம். அடுத்து உள்ள முக்கியமான சவால், சிறுநீர் இடைவேளை. இதில் அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அனுப்பாமல், வகுப்பு வாரியாக மாணவர்களை கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பலாம். மதிய உணவு இடைவேளையின்போது, இவ்வாறு தனிமைப்படுத்தி உணவு உண்பதை கண்காணிக்க வேண்டும். மாலை வேளையில், மணி அடிக்காது இடைவெளி விட்டு, வரிசையில் நின்று அனுப்ப வேண்டும். பள்ளி விட்டால் அங்குமிங்கும் நிற்காது வீட்டுக்குச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

#வகுப்பறையில்

"கற்றுத்தரும் கலையின் ஒரு பகுதி என்பது கற்பவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கற்பிப்பதுதான்."

மேமாதம் விடுமுறை முடிந்து வரும்போது புதிய புத்தக வாசனை, நண்பர்களைச் சந்திப்பது என உற்சாகத்துடன் குழந்தைகள் வருவர். ஒரு மாத விடுமுறை என்பதால், முதல் இருவாரங்கள் அடிப்படை கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் நடக்கும். தற்போது ஊரடங்கு முடிந்து பள்ளி திறக்க தாமதமாவதால், அடிப்படை கணிதத்திலும் மொழிப் பாட வாசிப்புப் பயிற்சியிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேர்வு நேரத்­தில் அமர்வதுபோல கூடு­தல் இடை­வெளி விட்டு மாண­வர்­கள் வகுப்பில் அமரவைக்க வேண்டும்.
மாணவர்களிடம் காணும் அலட்சியப் போக்கை கவனமுடன் கையாளுதல் அவசியம். ஷிஃப்ட் முறையில் நடப்பதால், அனைத்து ஆசிரியர்களும் அனைத்து வகுப்பு மாணவர்களையும் கையாளும் நிலைவரும். அன்றைய வீட்டுப்பாடங்களை தெளிவுற சொல்லிக்கொடுத்து, மறுநாள் செய்துவரச் செய்யலாம். பாடம் தொடர்பான வீடியோக்களை ஒளிபரப்பி, கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தலாம். அடிப்படை பயிற்சிகள் முடித்தவுடன், சிறுசிறு பயிற்சிகளும் பயிற்சித்தாள்களும் அளிக்கலாம். தேர்வுக்குத் தயார் செய்யும்பொருட்டு ஒட்டுமொத்த அழுத்தத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்துவதைத் தவிர்க்கலாம்

#பள்ளிகளில்

*குழந்தைகளிடம் நாள்தோறும் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு குறித்து பேசவேண்டும்.

*குழுவாக விளையாடுவதோ, குழுக்கலற்றலோ பார்த்துக்கொள்ள வேண்டும்.

*இருமும்போதும், தும்மும் போதும் கட்டாயம் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும்.

*காய்ச்சிய குடிநீரை குடிக்கவும், கொரொனா முடியும்வரை கடைகளில் தின்பண்டம் வாங்குவதை கட்டாயம் தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.
*வைட்டமின் D நிறைந்த சூரிய ஒளி பட தனிநபர் விளையாட்டுகள் விளையாடலாம் ஆசிரியர்கள் மேற்பார்வையில்

*ஆரோக்யமான பழங்கள், காய்கறிகள், சுண்டல் முதலிய எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுபொருள் சாப்பிட சொல்ல வேண்டும்.

*பேருந்துகளில் கும்பலாக ஏற்றாமல், அதிக முறை (trip)சென்றுவர தனியார் பள்ளிகள் ஏற்பாடு செய்யலாம்.

*சானிடைஸரை தினசரி காலை, மதியம், மாலை என உபயோகிக்கலாம் அல்லது அவர்களுக்கென பிரத்யேக சோப்பை உபயோகிக்க அறிவுறுத்தலாம்.

*காய்ச்சல் அறிகுறி யாரேனும் ஒரிவருக்கு தென்பட்டால்கூட உடனே
பெற்றோர்க்கு தகவல் சொல்லி அனுப்பிவைக்க வேண்டும்.
*விளையாட்டுப் பாட வேளைகளைத் தவிர்க்கலாம்.

*யாரும் யாருடைய முகக்கவசத்தையும் மாற்றக்கூடாது. அதேபோல், தொடர்ந்து ஒரே முகக்கவசம் அணிவதையும் தவிர்க்கவும்.

*நிலவேம்புக் கசாயம் போல் கபசுரக் குடிநீர் வழங்கலாம்.

*மாதந்தோறும் மருத்துவக்குழு அனைத்துக் குழந்தைகளையும் பரிசோதனை செய்ய வேண்டும்.

#பெற்றோர்கள்

பேருந்துகளில் அனுப்பாமல் முடிந்தவரை தாமே பள்ளிக்கு அழைத்து வரலாம். எல்லாவற்றையும் மறந்துவிட்டாயே என திட்டாமல் கற்றலுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். குழந்தைகள் மொபைல் பயன்பாட்டை குறைத்து, பாடங்களில் கவனம் செலுத்த உதவ வேண்டும்.

வாய்ப்பு உள்ள பெற்றோர்கள், புத்தகத்தில் உள்ள QR code பாடங்களைக் காண்பிக்கலாம். மழலையர் வகுப்புக் குழந்தைகள் எந்தப் பொருளையும் வாயில் வைக்கக் கூடாதெனக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தம் மகன் பள்ளியில் பாதுகாப்புடன் இருக்கிறான் என்பதை முழுமையாக நம்ப வேண்டும். அடிக்கடி குழந்தைகள் இடம்பெயர்தல், பள்ளி மாறுவதைத் தவிர்க்கலாம்.

#வருங்கால நம்பிக்கை

பழங்கால மாலுமி எனும் கதையில் வரும் வரிகளை ஜான் ஹோல்ட் மேற்கோள் சொல்லியிருப்பார்.

"தன்னந்தனி காட்டுவழியில் ஒருவன்
பயமும் திகிலும் கொண்டு நடப்பான்
கடந்த பாதையை திரும்பிப் பார்க்கத்
தலையைக்கூட திருப்ப மாட்டான்"

ஏனெனில், யாரோ ஒருவர் பின்தொடர்கிறார் என சிறுவன் நினைப்பான். ஆனால், பின் ஒருவரும் இல்லாதுகண்டு மகிழ்வுடன் முன்னேறுவான். அதுபோல், கடந்த காலம் பற்றி கவலை கொள்ளாது எதிர்காலம் நோக்கி முன்னேறுவோம். ஏனெனில் கல்வி ஒன்றே நம் முன்னேற்றத்திற்கான உன்னத ஆயுதம்

No comments:

Post a Comment