Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 22, 2020

பள்ளிகளுக்கு இன்று முதல் பாட புத்தகங்கள் விநியோகம்


கடலுார் மாவட்டத்தில் 2020-2021ம் கல்வியாண்டின் ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான விலையில்லா பாட புத்தகங்கள் இன்று முதல் பள்ளிகளுக்கு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2020-2021ம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுகள் தமிழ்நாட்டு பாடநுால் கழகத்தால் அச்சிடப்பட்டு, மாவட்டம் வாரியாக முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.பாட புத்தகங்களை பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக அந்தந்த பள்ளிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில், கடலுார், வடலுார், சிதம்பரம், விருத்தாசலம் என, நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளது. மாவட்டத்தில் 1,300க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிப் பெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு தேவையான புத்தங்கள் பாட வாரியாக முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இறக்கி வைக்கப்பட்டு, வடலுார், சிதம்பரம், விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலமாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் விலையில்லா பாட புத்தகங்களை இன்று 22ம் தேதி முதல், 30ம் தேதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தக விநியோகம் செய்யும் போது, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தனிமனித சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக் கவசம், கையுறை அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விலையில்லா நோட்டுகள் விரைவில் கொண்டு வரப்பட்டு, பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்படும்' என்றார்.

No comments:

Post a Comment