* பள்ளிகளை திறந்தாலும், சில மாதங்களுக்கு சுழற்சி அடிப்படையில், வாரத்தின் 3 நாட்கள் மட்டும் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்படலாம்.
* பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக மாஸ்க், கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டாலும், நடப்பாண்டு புதிய மாணவர் சேர்க்கை 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவின் கோர தாண்டவத்தால் தமிழகத்தில் நடப்பாண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகளும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கொரோனாவின் தாக்கம் குறையாததால், நடப்பு கல்வியாண்டிற்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது இதுவரை,உறுதி செய்யப்படாத நிலை உள்ளது. அதேசமயம், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்து வருகின்றன.
இதேபோல், அரசுப்பள்ளிகளில் படித்து வரும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வீடியோ பாடம் பதிவேற்றம் செய்தும், பாடபுத்தகங்களை வழங்கியும் வீட்டிலிருந்தே படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க, புதிய மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் வசூலில் தனியார் பள்ளிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த ஓரிரு மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், கொரோனா அச்சம் காரணமாக புதிய மாணவர் சேர்க்கை 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக கல்வியாளர்களும், ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் கொரோனா முற்றிலுமாக கட்டுப் படுத்தப்பட்டாலும், அதன் மூலம் ஏற்பட்டுள்ள தாக்கம் அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்கு நீடிக்கும். இதற்கு கல்வித்துறையும் விதிவிலக்கு அல்ல.
புதிய மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் செலுத்துதல், பள்ளிக்கு சென்று வருதல், கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள், தேர்வுகளை நடத்துதல், அதன் முடிவுகளை வெளியிடுதல் என அனைத்து படிநிலைகளிலுமே கொரோனாவின் தாக்கம் எதிரொலிக்கும். குறிப்பாக, நடப்பாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை பல மடங்கு குறையும். அதாவது, தற்போதுள்ள நிலையில் செப்டம்பர் மாதம் அல்லது அதற்கு பிறகுதான் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளது. அப்போது, நடப்பு கல்வியாண்டின் முதல் பருவம் முற்றிலும் முடிந்துவிடும். அதற்கு பிறகு ஓரிரு மாதத்தில் ஆண்டு இறுதித்தேர்வை சந்திக்கும் நிலை ஏற்படும். இதன் காரணமாக, பல பெற்றோர்கள் ஆண்டு முழுவதற்குமான கட்டணத்தையும் எவ்வாறு செலுத்துவது என்ற தயக்கத்தில் உள்ளனர். குறிப்பாக, தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் சேர்க்க 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கட்டணமாக செலுத்த வேண்டும்.
காலம் கடந்து பள்ளிக்கு செல்லும் போது, முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டுமா என நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெற்ேறார்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதேசமயம், கல்விக்கட்டணம் குறித்த யோசனை ஒருபுறம் இருந்தாலும், கொரோனாவின் அச்சமும் பெற்றோரின் தயக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதில் குழந்தைகளும், வயதானவர்களும் அதிகளவில் உயிரிழப்பதால் பெற்றோருக்கு ெகாரோனா குறித்த அச்சம் இன்னும் நீங்கவில்லை. இதன்காரணமாக, குழந்தைகளை வெளியே அனுப்ப தயங்கி வரும் நிலையில், நடப்பாண்டு பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்ற முடிவிலும் உள்ளனர்.
இந்த ஒருவருடம் தாமதமானாலும், அடுத்த ஆண்டு நேரடியாக யூகேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேர்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் உள்ளது. இவை அனைத்தும் அடுத்தடுத்த நாட்களில் ஏற்படும் கொரோனாவின் தாக்கத்தை ெபாறுத்தே அமையும் என்பதால், பெற்றோர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். இவ்வாறு கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
அரசுப்பள்ளிகளில் அதிகரிக்க வாய்ப்பு
தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் தயக்கம் காட்டுவதற்கு அங்கு வசூலிக்கப்படும் அதிகப்படியான கல்வி கட்டணம்தான் முக்கிய காரணமாக உள்ளது. ஆனால், அரசுப்பள்ளிக்கு அதுபோன்ற கட்டணம் எதுவும் இல்லை என்பதால், அங்கு மாணவர் சேர்க்கை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதேவேளையில், தனியார் பள்ளியை தவிர்க்கும் பலர், அரசுப்பள்ளிக்கு படையெடுக்க கூடும் என்பதால், அங்கு மாணவர் சேர்க்கை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. இந்த வருடம் இங்கு படிக்க வைத்துவிட்டு, அடுத்த ஆண்டு தனியார் பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் சில பெற்றோர்கள் முடிவெடுத்து உள்ளனர்.
No comments:
Post a Comment