JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, August 14, 2020

1, 6, 9 11-ம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை எப்படி.?

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில், 1, 6, 9-ம் வகுப்புக்கான 2020-21-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதன் காரணமாக பிற வகுப்புகளுக்கான (2 முதல் 10-ம் வகுப்பு) மாணவர் சேர்க்கையும் வரும் 17-ம் தேதி முதல் நடைபெற இருப்பதாகவும், மேல்நிலைப் பள்ளிகளில் +1 வகுப்பு மாணவர் சேர்க்கை வரும் 24-ம் தேதி முதல் நடைபெற இருப்பதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

மேலும், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த மாணவர் சேர்க்கை செய்யவும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிய சேர்க்கை செய்யும் நாளில் மாணவர்களுக்குரிய விலையில்லா பாடப் புத்தகங்கள், புத்தகப்பை, சீருடை மற்றும் இதர கல்வி சார்ந்த பொருட்களை வழங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். 

இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடுக்கான சேர்க்கைக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனருக்கு அனுமதி வழங்கியும் அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது பின்பற்ற வேண்டிய அரசின் நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் :

5 மற்றும் 8-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்கள் (டி.சி) வழங்க உரிய நடவடிக்கைகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுத்து அதற்கான மாற்றுச் சான்றிதழ்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி, சமூக இடைவெளியை பின்பற்றி மாற்றுச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.

பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தங்களுடைய ஊட்டுப் பள்ளிகளில் (பீடர் ஸ்கூல்) 5, 8-ம் வகுப்பு படித்த மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்கள், வீட்டு முகவரியை பெற்று 6, 9-ம் வகுப்புகளில் குறிப்பிட்ட நாட்களில் சேர்க்கை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அதிக மாணவர்கள் இருந்தால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலையில் தலா 20 மாணவர்கள், பெற்றோரை அழைத்து மாணவர் சேர்க்கை செய்திட வேண்டும். அதற்கேற்ப கூடுதல் நாட்களையும் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment